என் ப்ரியம்
உன்னிடம் மட்டும் தான்
பெருகிப் பரவுகிறது
என் கண்ணீர்
உன் இன்மைக்காகத்தான்
கட்டவிழ்க்கிறது
என் பரவசம்
உன் பார்வைக்குத்தான்
பூத்திருக்கிறது
என் வலி
உன் பற்றுதலில்தான்
மறைந்து அகல்கிறது.
என் உடல்
உன் ஸ்பரிசத்தில் தான்
உயிர்த்தெழுகிறது.
என் ஞாபகம்
உன் நினைவில் தான்
வாழ்ந்து தொலைக்கிறது..
என் உயிர்
உன் அணைப்பின்
ஆதூரத்தில் தான்
சாத்தியம் ஆகிறது
என் நிழல்
உன் நினைவுகளில் தான்
இளைப்பாறுகிறது
என் வாழ்வோ
உன்னிருப்பில் தான்
உயிரின் இசையை மீட்டுகிறது
நீயென் ஆதூரன்.
- இசைமலர்