சி. ஜெய்சங்கர் -
மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக் கழகத்தில் நாடகம் மற்றும் அரங்கத் துறையில், முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். ‘மூன்றாவது கண்' என்கிற உள்ளூர் அறிவுச் செயற்பாட்டுக் குழுவினை வழிநடத்தி வருகிறார். ‘மூன்றாவது கண்' என தமிழிலும், ‘தேர்ட் அய்' என ஆங்கிலத்திலும் இதழ்களை நடத்துகிறார். தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதி வருகிறார். இவருடைய துணைவியார் வாசுகி ஓவியராக இருப்பதுடன், பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளராகவும் இயங்கி வருகிறார்.
1965 டிசம்பரில் யாழ்ப்பாணம் மற்றும் கோண்டாவில் என்கிற கிராமத்தில், அரசு ஆயுர்வேத மருத்துவரான சிவஞானம் - யோகேஸ்வரி தம்பதியருக்கு ஜெய்சங்கர் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர். இதில் இருவர் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். தொடக்கக் கல்வியை கிராம பாடசாலையிலும், உயர் கல்வியை யாழ் கல்லூரியிலும் முடித்தார்.
குழந்தை மா. சண்முகலிங்கம் அவர்களைத் தனது முதன்மை ஆசானாகக் கருதும் இவர், யாழ்ப்பாணத்தில் இருக்கும்போது, நிலாந்தன், செல்வி, சிவரமணி, வைதேகி, மனோகரன், வாசுகி, அருந்ததி, அகிலன், சத்யன், வில்வரத்தினம், கருணாகரன், ராமேஸ்வரன், கோபிதாஸ், கண்ணதாசன் ஆகியோருடன் இணைந்து குழுவாக நாடகம் மற்றும் கலை இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் ‘தலித் முரசு'க்கு அளித்த சிறப்புப் பேட்டி.
சந்திப்பு : ரா. முருகப்பன்
ஈழம் வடக்கு, கிழக்கு என இரு பிரதேசங்களாக உள்ளன. வடக்கில் யாழ்ப்பாணமும், கிழக்கில் மட்டக்களப்பும் மிக முக்கியமான பகுதிகள். இவை இப்போது எப்படி இருக்கின்றன?
உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் காணப்படுவது போன்றே இலங்கையில் வாழ்கின்ற
சிங்களர், தமிழர் இடையிலும் பிரதேச ரீதியான வேறுபாடுகளும், ஒருமைப்பாடுகளும் காணப்படுகின்றன. இலங்கையில் உள்ள வடக்கு, கிழக்கு தமிழ்ப் பிரதேசங்களுக்கு இடையேயும் - ஒத்துப்போகக் கூடியதும்; வித்தியாசப்படுவதுமான பண்பாட்டு அம்சங்கள் நிலவுகின்றன. இரண்டுக்குமிடையே மொழிரீதியான ஒரு பொதுத்தன்மை காணப்படுகிற அதே நேரம், பிராந்திய மொழிவழக்கில் வேறுபாடுகளும் இருக்கவே செய்கின்றன. கிழக்கில் உள்ள மட்டக்களப்பில் படுவான்கரை, எடுவான்கரை என்கிற இரு பகுதிகளுக்கும் இடையே வித்தியாசங்களைக் காண முடியும். அதே போல யாழ்ப்பாணத்தில் உள்ள வலிகாமம், தீவகம், வடமராட்சி, தென்மராட்சி பகுதிகளுக்குள்ளும் பண்பாட்டு வித்தியாசங்களைக் காண முடியும். வடக்கு, கிழக்கின் பொதுத்தன்மை என்பது வித்தியாசங்களுடன் கூடியது. முக்கியமான அடிப்படையான வித்தியாசமாக இருப்பது சமூக, பொருளாதார நிலைமைகள்தான்.
ஈழம் பற்றி சிந்திக்கும்போது, கிழக்குப் பகுதியில் குறிப்பாக மட்டக்களப்பிலுள்ள படுவான்கரை என்பது முக்கியமான, பாரம்பரியமான, சமூக பண்பாட்டு மய்யமாக விளங்கி வருகிறது. ஆனால், கெடுவாய்ப்பாக படுவான்கரை இன்று மக்கள் புலம் பெயர்ந்த பிரதேசமாக இருந்து வருகிறது. அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்து எடுவான்கரை என்ற இடத்தில் புலம்பெயர்வு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். படுவான்கரை ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்று சொன்னால், பாரம்பரியமான உள்ளூர் அறிவுத்திறன் களஞ்சியமாக அது இருந்து கொண்டிருக்கிறது. நாங்கள் பலமான சமூகமாக வாழ்வதற்கான ஆதாரங்கள் பல அங்கே காணப்படுகின்றன. இன்றைய யுத்தமும், அதனால் அந்தப் பகுதியில் ஏற்பட்டிருக்கின்ற இடப்பெயர்வும், குறிப்பாக தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பாக இருக்கின்றன. இந்த இடப்பெயர்வு அந்த மக்களைப் பாரம்பரிய அறிவுசார் முறையிலிருந்து அந்நியப்படுத்தியிருக்கிறது; அப்புறப்படுத்தியிருக்கிறது. உள்ளூர் அறிவுத் திறனைக் கொண்ட ஒரு சமூக, பொருளாதார கட்டமைப்பு நோக்கில் பார்க்கும்போது, இதை ஒரு மிக மோசமான இழப்பாகக் கருதுகிறோம்.
அரசியல் மொழியில் சொன்னால், வடதமிழீழம், தென் தமிழீழம் என்பது, சமூக - பண்பாட்டு - பொருளாதார ரீதியாக பொதுத்தன்மைகளும் வித்தியாசங்களும் கொண்டவை. அதே நேரம், எல்லா சமூகங்களுக்கும் உள்ளது போல் அந்தப் பிராந்தியங்களில், பிராந்தியங்களுக்கிடையில் காணப்படுகின்ற ஆதிக்க நிலைமையை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியத் தேவையாக இருக்கிறது.
ஈழத்தில் முகாம்களிலும், வெளிநாடுகளில் அகதிகளாகவும் உள்ள தமிழர்களின் பிரச்சினைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தொடர்ச்சியான போரும், இடப்பெயர்வும் எம்மக்களின் வாழ்விடங்களை, வாழ்வாதாரங்களை எல்லாம் தொலைத்துவிட்டு, ஓர் அன்னியப்படுத்தப்பட்ட நிலையில் தங்கி வாழ்கின்ற சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. இது, எங்களை மிக ஆபத்தான தொரு சமூக, பொருளாதார நிலைக்கு இட்டுச் செல்கிறது. மேலும், தாராளமயம் மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு - உள்ளூர் முரண்பாடும், அதன் காரணமாக எழுந்த போரும் பயன்படுத்தப்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். மேலும், இந்த இடப்பெயர்வு என்பது, உற்பத்தி சக்தியாக இருந்த எங்களை தங்கி வாழும் ஒரு சமூகமாக மாற்றி, குறைந்த ஊதியத் தொழிலாளர்களாக மாற்றும் நிலைமைகளையும், வெறும் நுகர்வு சக்திகளாக வாழ்கின்ற நிலைகளையுமே ஏற்படுத்தியிருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
இன்றைய நிலையில் பெண்கள் எத்தகைய பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்?
வரலாற்றுக் காலம் முழுக்க, உலகில் போரின் முதல் பலி உண்மை என்று சொல்வார்கள். அதற்கு சமமாக நாங்கள் சொல்ல வேண்டியது - போரில் நேரடியாகவும், மறைமுகமாகவும் மிக்க உக்கிரமாக பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான். குடும்பச் சுமையைத் தாங்கி வீட்டிற்குள் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்த பெண்கள், யுத்தம் காரணமாக இடப்பெயர்வு நிகழும் நிலையில், அவர்கள் அம்பலத்தில் வெட்டவெளியில் குடும்பத்தை நடத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். இது ஒன்றே, இந்தப் போரில் பெண்கள் நிலையைப் புரிந்து கொள்ள பொருத்தமாக இருக்கும். அம்பலத்தில் குடும்பத்தை நடத்துவது என்பது, பெண்களுக்கு எத்தகையதொரு மோசமான சூழல் என்பது சிந்திக்கத் தெரிந்த எவருக்கும் விளங்கும். போர் நடைபெறும்போது பெண்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது, ஒரு வெளிப்படையான உரையாடலுக்குரியதாகவும், எதிர்ப்புக்குரியதாகவும் இருப்பது என்பதைக் காண முடிகிறது. இது மட்டுமில்லாமல் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயமும் உள்ளது.
போர் சார்ந்த நடவடிக்கைகளால் பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுவது முக்கியத்துவம் பெறுகின்ற அதே நேரம், சமூகத்தில் பெண்கள் அவர்கள் வாழ்கிற குடும்பத்துக்குள் வன்முறைக்கு உட்படுத்தப்படுவது என்கிற விஷயம், பேசாப் பொருளாக அல்லது மறந்து போகிற விஷயமாக ஆகியிருப்பது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அது குறித்து ஓர் உரையாடல் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது மிகவும் அவசியமாகும். இது பற்றிய சிந்தனைகளில் அடிப்படை மாற்றம் தேவை என்பது மிக முக்கியமாகும்.
சமூக விடுதலை என்பதை, அனைத்து வகையான ஒடுக்குமுறைகளையும், வன்முறைகளையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி எதிர்கொள்ள வேண்டிய செயற்பாடாகவே பார்க்க வேண்டும். ஒவ்வொன்றாக தனித்தனியாக அல்லது ஒன்று முந்தியது, மற்றது பிந்தியது என்று பார்ப்பதென்பது பொருந்தாது. ஏனெனில், இத்தகைய நிலைகள் சமூகத்தில் ஒன்றுடன் ஒன்று இணைந்ததாகவும், சிக்கல்கள் நிறைந்ததாகவும் காணப்படுகின்ற சூழலில் - சமூகங்களால் புறத்திருந்தும், அகத்திருந்தும் நிகழ்த்தப்படுகின்ற வன்முறைகள் பற்றி ஒரே நேரத்தில், ஒரே தளத்தில் நாங்கள் எதிர்கொள்ள வேண்டியது என்பதுதான் - எதார்த்தமானதும், இயல்பானதும், பொருத்தமானதும் என்பதை நாங்கள் சிந்தித்து செயல்பட வேண்டியுள்ளது.
இந்த வகையில் ஈழத்தில் பெண்கள் அமைப்புகள் போரினால் ஏற்படும் வன்முறைகளை எதிர்கொண்டும்; குடும்ப சமூக வன்முறைகளை எதிர்கொண்டும்; சமூகத்தின் உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் தடைகளையும் சவால்களையும் கடந்து செயற்பட்டு வருவது சாதகமானதொரு நிலைமையாகும்.
சிறுவர்கள் அங்கு இயல்பாக இருக்க முடிகிறதா? அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது?
போரின் எதிர்காலத்தை முன்னெடுப்பவர்களாக இந்த சிறுவர்களே எல்லோராலும் முன்னிறுத்தப்படுகிறார்கள். இதன் காரணமாக, ஆக்கப்பூர்வமான சக்திக்காக உள்வாங்கப்பட வேண்டிய சிறுவர்கள், போரின் அழிப்பு செயல்பாட்டு சக்தியாக உள்வாங்கப்பட்டு முன்வைக்கப்படுவதென்பதுதான் எதார்த்தமாக இருக்கிறது. வளர்ச்சி இல்லை என்பதற்கும் மேலாக அழிவு நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் காண நேரிடுகிறது. இதனால் சிறுவர்களது, இளைஞர்களது உழைப்புச் சக்தி வீணடிக்கப்படுகிறது. இது, இரட்டிப்பு பாதகமான நிலையாகக் காணப்படுகிறது. சிறுவர்கள் காண்கிற இயல்பு வாழ்க்கை வன்முறை சார்ந்ததாக உள்ளது. எனவே, அவர்களின் எதிர்கால வாழ்க்கை என்பதும் வன்முறை சார்ந்ததாகவே இருக்கும் என்பதற்கான சாத்தியப்பாடுகள்தான் காணப்படுகின்றன. இது, மிகவும் ஆபத்தான நிலை.
ஏவுகணைத் தாக்குதல்கள், ராணுவ சுற்றிவளைப்புகள் என்ற சூழலில் வாழ்கிற சிறுவர்களுக்கு தங்களைப் போராளிகளாக நினைத்துக் கொள்வதைத் தவிர, வேறு எந்தத் தெரிவும் அவர்களுக்கு இல்லை என்பதை நாங்கள் மறுக்க முடியாது. மேலும், இப்போதுள்ள சூழலில் நிலைமை என்னவெனில், வெறுங்கையுடன் சாதாரணமாக அவலமாகச் சாவதா அல்லது போராளியாகப் போரிட்டுச் சாவதா என்கிற இருவகையான சூழலுக்குள் - வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சிறுவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது ஒரு பக்கம் என்றால், தென்னிலங்கையின் அரசியல் நிறுவனங்கள் மற்றும் அதிகார மய்யங்கள் மத்தியில், சுற்றுலா மய்யங்களில் நடைபெறும் சிறுவர்களது பாலியல் தொழில் என்பது, இணையத்தளங்களில் பிரசித்தமாயிருக்கின்ற நிலையில் அதிக கவனத்தில் கொள்ளப்படாமல் உள்ளது.
சிறுவர்கள் வடகிழக்கா அல்லது தெற்கா என்பது முக்கியமில்லை. இவர்களை வைத்து அரசியல் நடத்துகிறார்கள் என்பதுதான் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம். சிறுவர்கள் படையில் சேர்வதை தவிர்த்தல் என்பதில் நாங்கள் உண்மையில் அக்கறை உடையவர்களாக இருக்கிறோமா என்பதற்கு முதல் நிபந்தனையாக, எந்தவித நிபந்தனையும் இன்றி யுத்தத்தை நிறுத்த வேண்டும். இதுதான் அடிப்படையான விஷயம். அதைச் செய்வதற்கு நாம் எவருமே தயாரில்லாமல், பாதகமான நிலைமைகள் எல்லாவற்றையும் ஒவ்வொருவரும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தும் விஷயத்தில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
போர்ச் சூழல் காரணமாக ஈழத்தில் சாதிகள் ஒழிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் உண்மை இருக்கிறதா?
போர்ச்சூழல் காரணமாக சாதிய வன்கொடுமைகள் குறைந்திருக்கிறது என்று வேண்டுமானால் கூறலாம். ஆனால், ஜாதி ஒழிந்துவிட்டதாகச் சொல்ல முடியாது; மறைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். உதாரணமாகக் கூறினால், ராணுவம் குண்டு வீசப் போகிறதென்றால், மக்கள் முதலில் போய் தஞ்சமடையும் இடம் அருகிலிருக்கின்ற கோயில்தான். உயிர் பிழைக்க ஓடி கோயிலில் தஞ்சம் புகும்போதுகூட, சாதிப்படி நிலை வெளிப்படும். ஓடி தஞ்சமடையும்போது பார்ப்பனர்கள் கோயிலின் கர்ப்பகிரகத்திலும், ஊரில் முற்பட்ட முன்னேறிய சாதியினர் அதற்கடுத்த பிரகாரத்திலும் இருப்பார்கள். கோயிலின் வெளியே உள்ள மரத்தடி, சகடைகள் நிறுத்துகின்ற கொட்டகைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் தஞ்சமடைவார்கள்.
இன்னொன்றையும் சொல்கிறேன். கூத்து குறித்து ஒரு அண்ணாவியிடம் பேசிக் கொண்டிருந்தேன். பறையறிவிப்போன் குறித்து அந்தப் பேச்சு நீண்டது. அரசருடைய செய்திகளையும் உத்தரவுகளையும் நாட்டு மக்களுக்கு அறிவிக்கின்ற பணியை செய்கின்றவன் பறையறிவிப்போன். அரசன் வரவை அறிவிக்கும் கவுரவமான கட்டியக் காரன் போல, அரச செய்தியைச் சொல்லும் பறை அறைவோனும் கவுரவமாகவே பணியாற்றுவது எதார்த்தமாக இருக்கும் என்றேன். அதற்கு அந்த அண்ணாவி, பறை அறைவோனை பாரம்பரியக் கூத்தில் உள்ளது போல் குடிகாரனாக, முடவனாக, அறிவில்லாதவனாக, கூடாத வார்த்தைகள் பேசி வருபவனாக அல்லாமல் கவுரவமான பாத்திரமாகக் கொண்டு வருவது பிரச்சினையில்லை. அது நல்லதுதான். ஆனால், அரசர் பிரதானிகளுடன் பறையறைவோன் கொலுவில் வர முடியாது. அதை ஏற்க மாட்டார்கள் என்றார். இப்படி ஒரு புதிய கருத்து எனக்கு அப்போதுதான் புரிந்தது. உரையாடல் களம் இருப்பதால்தான் இப்படி புதிது புதிதாய் புரியவும், உணரவும் முடிகிறது. பிறகு பேசினோம். கட்டாயம் நாம் அடுத்ததொரு கூத்தில் மன்னன் கொலு வரவில் பறையறிவிக்கும் பறையனை கட்டாயம் இடம் பெறச் செய்யும் வகையில் புதிய கூத்து எழுதப்பட வேண்டும். எனது சிற்றறிவுக்கு எட்டிய வகையில் இதுவரையில் அத்தகையதான கூத்துப் பற்றிக் கேள்விப்படவில்லை.
விடுதலைப் போராட்டத்தில் கலைவடிவங்களின் பங்கு எந்த அளவில் உள்ளது?
எங்களின் விடுதலைப் போராட்டத்தில் கலை வடிவங்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. எல்லா கலைகளும் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, விடுதலை இயக்கம் சார்ந்த கலைப்படைப்புகள் ஒரு வகையாகவும், விடுதலை இயக்கம் சாராத சமூக, மக்கள் சார்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற கலைஞர்களது ஆக்கங்கள், படைப்புகள் ஒரு வகையாகவும் என இரு தளங்களில் நாங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறோம். இதில் விடுதலை இயக்கங்களின் கலை படைப்புகள், அரசியல் பிரச்சார நோக்கில் பயன்படுத்தப்படுகின்றன. இது இன்று மேலோங்கியுள்ளது.
கலைகளில் எவை பேசப்பட்டுள்ளன, எவை பேசப்படவில்லை என்பது பற்றி ஒரு மதிப்பீடு செய்கின்றபோது, எங்களுடைய அரசியல் சூழ்நிலையில் கலைவெளிப்பாடு எவ்வாறு நிகழ்ந்திருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ள முடியும். பிரச்சார நோக்கில் பார்க்கும்போது, எல்லா கலைச்சாதனங்களுமே மிகவும் வலுவான முறையில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. நாடகம் என்று பார்த்தாலும் சரி, கூத்து என்று பார்த்தாலும் சரி, அரங்கு என்பது பிரச்சார நோக்கில் வீதிநாடகங்களாக, மேடை நாடகங்களாகப் பரவலாக மேடையேற்றப்பட்டிருக்கின்றன. புலிகள், வீதிநாடகங்களை வலுவான கலையாக முன்னெடுத்திருக்கிறார்கள். அதற்கும் மேலாக மேடை நாடகம் என்பதிலும் அவர்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்தக் கலைவடிவங்களில் எங்களுடைய பாரம்பரிய கலையம்சங்கள் பல்வேறு வழிவகைகளில் எடுத்து கையாளப்பட்டிருக்கின்றன. அதில் சிற்பம், ஓவியம், கவிதை, ஆடல், வாத்தியங்கள், பாடல்கள், நாடகங்கள் என எல்லா வடிவங்களும் அடங்கியுள்ளன. மக்கள் மத்தியில் தொடர்பு கொள்வதற்கு ஒரு வலுவான வழிமுறையாக இவை இனங்காணப்பட்டுள்ளன.
‘மூன்றாவது கண்' என்கிற உள்ளூர் அறிவுத் திறன் செயற்பாட்டுக் குழுவின் மூலம் எத்தகைய பணிகளை செய்து வருகிறீர்கள்?
எமது சமூகத்தில் மக்கள் தமக்கு வசதியான, வாய்ப்புள்ள இடங்களான கோயில், வீதி, தெருச் சந்திப்பு, வீட்டு முற்றம், மர நிழல்களில் கூடிக்கதைக்கும் மரபு இருந்தது. இந்தச் சமயங்களில் பல்வேறு செய்திகளையும், சம்பவங்களையும், தலைப்புகளையும் அதன் சாதக பாதகங்களுடன் அலசி, ஆராயும் நிலை இருந்தது. ஆனால், இன்று இனப்பிரச்சினையும், ராணுவ நடவடிக்கைகளும் கூர்மையடைந்துள்ள நிலையில், பொதுமக்களால் கூடிக்கதைக்கும் நிலை இல்லாமல் ஆனது.
இப்போது வீடுகளில் முடங்கியுள்ள மக்களை தொலைக்காட்சிகள், மூளைச்சலவை செய்வதில் பெரும் பங்காற்றி வருகின்றன. தமிழ் நாட்டு திரைப்படங்கள், தொடர் நாடகங்கள் புற்றீசல்போல வீடுகளுக்குள் நுழைந்துவிட்டன. இது, மக்களுக்கு இன்றுள்ள எதார்த்தத்தின் குரூரத்தை விளங்கிக் கொள்ளாவிட்டாலும்; அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழியாகவும் அமைந்து காணப்படுகிறது. இத்தகைய மாய வாழ்க்கையில் இருந்து எம்மை விடுவித்துக் கொண்டு, எங்களை நாங்கள் புரிந்து கொண்டு, எங்களுக்கான ஒரு சமூகத்தை உருவாக்குவதை நோக்கி செயல்படுவதும், சிந்திப்பதுமே ‘மூன்றாவது கண்'ணின் நோக்கம்.
இதற்காக அறிவுத்தளத்தில் நின்று பல்வேறு தளங்களில் விவாதிப்பது முக்கியமாகிறது. குறிப்பாகப் பிரதான ஒட்ட அச்சு மற்றும் இலத்திரணியல் தொடர்பு ஊடகங்கள் இந்த வேலையை செய்வதாக சொல்கிறதே தவிர செய்வதில்லை. தொடர்பு சாதனங்களான ஊடகங்கள் அனைத்தும், ஒன்று அதிகாரத்திற்கு சேவகம் செய்கின்றன; அல்லது வியாபாரத்தை மய்யமாகக் கொண்டு அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு இயங்குகின்றன. தொடர்பு சாதனங்களின் ஆக்கிரமிப்பு வலைப்பின்னலுக்கு மாற்றாக பொதுமக்கள் மத்தியில் விவாதங்களைத் தூண்டவல்ல அரங்குகளின் தேவை அவசியமாகிறது. அப்பொழுதுதான் செய்திகளுக்குப் பின்னால் உள்ள செய்திகளை விளங்கிக் கொள்ளவும், அது பற்றி விவாதிக் கவும் முடியும். எமக்குப் பொருத்தமான மக்கள் மய்யப்பட்ட விவாதக் களங்களை அரங்க அறிவுடனும், பாரம்பரிய உரையாடல் களங்களின் அனுபவத்துடனும், அறிவுத்தளத்தில் நிகழ்த்துவது முக்கியம் என்கிற உரத்த சிந்தனையும் செயற்பாடும் இன்றைய அவசியத் தேவையாக உள்ளன. இதற்கான அரங்குகளைத்தான் ‘மூன்றாவது கண்' முன்னெடுத்து வருகின்றது.
மேலும், இன்றைய கல்வி முறையில் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியத் தேவையிலும் உள்ளோம். தொழிற்சந்தை நிலவரத்திற்கேற்ப மாணவர்களை உற்பத்தி செய்கின்றோம் என்று கல்விமான்களும், அரசியல்வாதிகளும் நிர்வாகிகளும் சொல்கிறார்கள். அதில் பெருமை கொள்கிறார்கள். ஆனால், மாணவர்கள் எப்படி உருவாக்கப்படுகிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். பல்கலைக்கழக உயர் கல்விக்கு தெரிவான புதுமுக மாணவர்களுக்குக் கற்பிக்கும் வாய்ப்புகள் எனக்கு கிடைத்தன. அப்போது அந்த மாணவர்களிடம், கண்டுபிடிப்புகள்; கண்டுபிடிப்பாளர்களாக வெள்ளையர்கள் பெயர்கள் மட்டுமே பாடப்புத்தகங்களில் காணப்படுகின்றன; ஏன் நம்மவர்கள் காணப்படவில்லை என்ற கேள்வியை எழுப்பினேன். அதற்கு மாணவர்களிடமிருந்து, அவர்கள்தான் கண்டுபிடிப்பார்கள், கண்டுபிடிக்கக் கூடியவர்கள், அவர்கள் கண்டுபிடிக்கட்டும். நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம்; அவர்களுக்குதான் எல்லா வசதிகளும் உள்ளன, எங்களுக்கு வசதி வாய்ப்புகள் இல்லை. மேலும், நாங்கள் சோம்பேறிகள் என்கிற பதில்கள் கிடைத்தன. கல்வித் துறையில் கற்பிக்கும் பணியை செய்து வருகின்ற நானே ஒரு கணம் அதிர்ந்து போனேன். அவர்கள்தான் கண்டுபிடிப்பார்கள், நாங்கள் சோம்பேறிகள், நாங்கள் பயன்படுத்துவோம் என்கிற இந்த பதில்களை கூறத்தான் மாணவர்களுக்கு இத்தனை ஆண்டுகளாக நாம் சொல்லித் தந்திருக்கின்றோமா?
காலனித்துவ கல்விமுறையால், இன்றைய எதார்த்தச் சூழலில் இருந்து அந்நியப்படுத்தப்பட்டுள்ளோம். இச்சூழலை உணரவைத்து அதிலிருந்து மீள வேண்டும் என்கிற உணர்வை உருவாக்கி கற்பனை, சிந்தனை, படைப்பாற்றல், செயல் திறனுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக கல்வி சார்ந்தும் சில செயல்பாடுகளுக்கு ‘மூன்றாவது கண்' முன்னெடுத்து வருகின்றது.
மக்களை ஒன்று சேர்க்கவும், தங்களுக்குள் உரையாடிக் கொள்ளவும் தங்களது தேவைகளைத் தாங்களே அறிந்து கொள்ளவும், அவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வழிவகைகளை தீர்மானித்துக் கொள்ளவும், தங்களது ஆற்றல்களை அடையாளம் காணவும், வெளிப்படுத்திக் கொண்டாடவும், தாழ்வு சிக்கல்களில் இருந்து விடுபட்டுக் கொள்ளவும், படைப்பாற்றல்களை வெளிப்படுத்தவும் கூடிய கல்வியை, சமூகத்தை, பண்பாட்டை, அறிவுத்தளத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் ‘மூன்றாவது கண்'ணின் நோக்கம்.
- அடுத்த இதழிலும்
We study together in the school, side by side. There is no difference. Any one can start a buisness any where, either in Jaffna or Batticaloa.
The government is the major employer and there is no descrimination based on caste. The Dean/Head of Tamil Department of Eastern University is a lower caste lady, from Valvettithurai, Pirabhakaran's birth place. Professor K. Sivathamby writes and speakes in many forums without any let. The situation in Eellam and Tamil Naadu is entirely different when it comes to caste. Pirabhakaran from lower caste have been the leader of Tamils for quite a long time. We do not consider Brahmins as our enemy. They do not suppress us. In the temple we respect them. That is all. We almost outsmart them in studies. When I was in the University in 1969, there was only one Bhramin in my batch of 150 Engineering students. That was the only engineering faculty for the whole of Sri Lanka, Ceylon at hat time. I used to go to a bhramins house for help in studies. I go to one room only. The person is now a professor in a University in Ohio-USA. He was two years senior to me in the school and the campus. We mostly call them Iyer rather than Bhramins. Even religious rites, they give place to Tamil also. They cite sanscript mantarams but they also use Tamil . They ask us to recite Thevaaram, Thirupalandu, Thirupugal etc. in the religious rites.
Casteism is rampant only in marriage. There is no way we can eradicate as it is now. We have to give our house to our daughters, not to sons. So the parents will not give their house if their daughter select some one on her own. We have no economy or land to build house. We have no power to implement housing schems where some one pays the monthly rent to take a flat/apartment. In Jaffna, marriage is a very serious problem. Average marriage age for men is more than thirty and that of girls is also not far down.
Temples are opened to all in the early part of 1960s. No Iyer can stop any one from entering the Temple. When there is bombing we first run into close by bunkers, not to the far away temples. Dogs run into it before us is another fact. They know when to run. They the last to come out. If temple is close by we may run into but there is no restriction. It is an outright lie. We do not go into the Karuvarai, except Iyer. That is the case even before the war and after the war. We usually never heard of the leella vinothams of Saamiars as in Tamil Naadu/India. Coincidently, the Iyer who studied with me during 1969 to 1974 came to see us from U.K.and we had a get together in the house of a Catholic. We all studied together. We had dinner together. We made mostly vegetarian dishes. However we had non veg as well. The Iyer and his wife ate vegetarian food and we had both. Both respect each other. That is all. Cast issue in Sri Lanka and Cast issue in India are entirely different.
Pirabhakran, Kittu, Kuttimanni, Sornam, Balraj are all from lower caste and these are house hold names. They exercised power to the hilt.
Easwaran
RSS feed for comments to this post