 |
வலி ராசை. கண்மணிராசா
சாணிப்பால் ஊற்றி
சவுக்கால் அடித்தான்
என் பூட்டனை உன் பூட்டன்
காலில் செருப்பணிந்ததால்
கட்டி வைத்து உதைத்தான்
என் பாட்டனை உன் பாட்டன்
பறைக்கு எதுக்குடா படிப்பு? என
பகடி செய்து ஏசினான்
என் அப்பனை உன் அப்பன்
உங்களுக்கென்னப்பா
சர்க்காரு வேலையெல்லாம்
உங்க சாதிக்குத்தானே! என
சாமர்த்தியம் பேசுகிறாய் நீ
ஒன்று செய்!
உன்னையறியாத ஒரு ஊரில்
உன்னைப் பறையனென்று
சொல்லிப்பார்!
என் வலி
உனக்குப் புரியும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|