 |
யாழன் ஆதி கவிதை
பெயர்க்க முடியாத
பெருங்கோபத்துடன்
நெருப்புக் குழம்பென
திரண்டன விழிகள்
நீளும் துரோகத்தின் கைகளை
எதிர்த்து
கொடுங்கோன்மையின் குருதிக் கவிச்சி
நெஞ்சைப் பிசைய பிசைய
நரம்புகள் இறுக்கப்பட்டு
செத்து மடிந்தது மனித உரிமை
வல்லாண்மை கழுகின்
கூர்நகப் பிராண்டலில்
ரத்தக் கீறல்களாய் மாறியிருக்கின்றன
நாடுகளின் எல்லைக் கோடுகள்
சுரண்டல் சாட்டையை
சொடுக்கி அடித்து
ஜனநாயகம் என
உரக்கக் கத்துகிறது
தசை குதறும் வெறி
ஆயுதத் தேடலில் அதிகாரத்தை
நிலைநிறுத்தும் ஏகாதிபத்தியம்
நாவை சுழற்றி உதடுகளை நக்கி
உற்று உற்றுப் பார்க்கிறது
அடுத்த வேட்டைக்காய்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|