கீற்றில் தேட...

அண்டை வீட்டாரிடம் பேசாமலிருப்பது
 அதை எண்ணி வருத்தம் கொள்வது அல்லது
 வருத்தப்படாமலிருப்பது…
 மனைவி, பிள்ளையுடன் பாசமற்று இருப்பது..
 பாசத்திற்காக ஏங்குவது அல்லது
 ஏக்கமற்று இருப்பது..
 அறிந்தவர்கள் கடந்து செல்லும் போது
 கவனிக்காமல் செல்வது பின்பு
 அதை எண்ணி வருத்தப்படுவது அல்லது
 மறந்து விடுவது…
 மனதிற்கு விளக்கமளிக்கும்
 விளங்காதவர்களுக்கிடையில்
 காரணம் ஏதுமின்றி
 தற்கொலை செய்து கொள்வதும் கூட…

தவம்

வாகன உரசலின் சிரத்தையற்று
தார்ச்சாலையின் மத்தியில்
அழகுப்பதுமையாய் வீற்றிருக்கும்
வெள்ளாட்டுத் தாயொன்று…
 
 குறும்பாட்டு ருசியில்
 ஒவ்வொன்றாய்
 தன்குட்டிகளை இழந்த விரக்தி..

அவ்வசிரத்தையின் இறுமாப்பு
வலிமையைக் காட்டினாலும்
இப்புவியில் கால்பாவாத
இன்னுமொரு உயிரல்லவோ
அதனுடன் காத்துக் கிடக்கிறது.

- சுரேசுகுமாரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)