*
வெளியேறும் பதட்டத்தோடு
ஜன்னல் கண்ணாடியில் மோதிய வேகத்தில்
கிர்ரென்று சிறகுகள் துடிக்க
மயங்கிக் கிடக்கிறது மழைத் தும்பி
பால்கனிவழித் தெரியும் வானில்
வெளுத்த வெயிலில்
கோட்டுச் சித்திரங்களாய் அசையும் தும்பிகள்
மழையைப் பாடுகின்றன
என் அறைக்குள் ஒற்றையாய் நுழைந்துவிட்ட தும்பி
மழைப்பாட்டை முதலில் எனது
ட்யூப் லைட்டின் நீளக் குழல் முழுதும்
எழுதிக் கொண்டிருந்தது
பிறகு நிலைக் கண்ணாடியில்
வழியச் செய்தது மழையின் நிழலை
மழைப்பாட்டின் ரீங்காரம்
அறையிலிருந்து மெல்ல நழுவி
மொட்டைமாடியெங்கும் இசைத்தது
அகப்படும் அனைத்தையும்
நனைத்துக் கொண்டு
ஜன்னல் கதவிடுக்கினூடே
மழைச்சாரல் பட்டுத் தெறிக்கக்
காத்திருக்கிறது
இன்னும் அரை மயக்கத்தில்
என் மழைத் தும்பி
*****
--இளங்கோ (
கீற்றில் தேட...
கோட்டுச் சித்திரமாய் அசையும் மழைத் தும்பி..
- விவரங்கள்
- இளங்கோ
- பிரிவு: கவிதைகள்