
பரவுகிறது கோபம்
அறிவின் நீள்சமவெளியெங்கும்
அடைக்கப்பட்ட ஊற்றுக் கண்களில்
கசிகின்றது இருள்
மடமை சுமைகளை ஏற்றியேற்றி
நீள்கிறது மூடநம்பிக்கையின் கம்பி
மதத்தின் போதை
கண்களை மறைக்க
அரங்கேறுகின்றன பிரார்த்தனை
பயங்கரங்கள்
ஒளியை உறிஞ்சிக் கருத்த
இரவு மரங்களாய் கிடக்கின்றன
மூட மனிதங்கள்
பகுத்தறிவின் பாதைகளைத் தூர்க்கும்
பக்தி மாயைகளை
விரட்டித் துரத்த தேவை
அம்பேத்கரின் ஒரு துளி மையோ
பெரியாரின் கைத்தடி நுனியோ
காரைக்குடியில் உள்ள சின்ன முத்துமாரியம்மன் கோயிலில் 22.3.2006 அன்று நடைபெற்ற திருவிழாவில், பத்தடி நீள இரும்புக் கம்பியை பக்தரின் பாவத்தைப் போக்க, ஒரு கன்னத்தில் குத்தி மறு கன்னத்தில் வெளியே எடுக்கிறார்கள். படம் : "டெக்கான் கிரானிக்கல்'
-யாழன் ஆதி .