 |
கட்டுரை
ஏதேன் சீதனம் இப்னு ஹம்துன்
'வாழ்க்கை'ப்பட்டு வந்த..
எல்லோருக்கும் போலத்தான்
எனக்கும் வழங்கப்பட்டது
ஏதேன் சீதனம்.
கதறியழுதவர் தம்மின்
கண்ணீரினூடே தெரிந்தன
இருப்பின் நியாயமும்..
இறப்பின் அநியாயமும்.
என்றாலும்...
இம்'மை' அநியாயம்
மறு'மை'க்கு நியாயமோ..?
இமைக்க மறந்த ஒரு கணத்தில்
இன்னொரு(வர்) தோளுக்கு
இறங்கிப்போயிருந்தன
சுமைகளும்; சொந்தங்களும்
சொல்லிக்கொள்ளாமலேயே..
ஆள் மாற்றி, தோள் மாற்றி
அனுப்பி வைத்தனர்
'நிலையத்'துக்கு.
எண்ணங்கள்;
எண்ணத்தால் விளைந்த செயல்களன்றி
எதுவுமே சுமந்துக்கொள்ளாமல்
சமாதி வழிப்பயணம்.
வழியனுப்ப வந்தவர்களில்
கனவுக் குமரிகளைத்தான் காணோம்
அடைந்து விட்டவை
சாதனைத் திருமதிகளாய்..
அடையாதவைகளோ
ஏக்கக் கன்னிகளாய்..
குடும்பங்கள்-பொறுப்புக்கள்
கூட்டாளிகள்-தொழில்கள்
கடமைகள் உடமைகள் எல்லாமே
கழற்றி விடப்பட்டிருந்த
கால் செருப்புக்களோடு!
தன் தேகக்கூடு தவிர
தெரிந்துவைத்திராத ஆன்மா
நன்மை தீமைகளின்
நீதிநிலை அறிக்கையை
வழியெங்கிலும்
யோசித்தப்படி..
ஒரு 'நான்' மறைந்துப் போயிருக்க..
வெற்றிடம் 'உண்டாகி'யிருந்தது
நாளை நிரப்பப்படுமோ?....!
(குறிப்பு: ஏதேன் என்பது அந்த ஆதி சுவர்க்கத் தோட்டம் தான்- பைபிள் மரபில் ஈடன் என்பது தமிழில் ஏதேன் ஆனது.)
- இப்னு ஹம்துன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|