 |
கட்டுரை
வருத்தமுள்ள அர்த்தங்கள் இப்னு ஹம்துன்
கணந்தோறும் நிகழ்கின்றன
சொற்களின் பிரசவங்கள்.
சூல் கொண்ட அர்த்தங்களை
சுமந்து வரும் சொற்கள்
அடைகின்றன
தாய்மையின் பூரிப்பு!
சுமத்தப்பட்ட அர்த்தங்களை
சேர்த்திழுக்கும் சொற்களுக்கோ
செக்கு மாடுகளின் பரிதவிப்பு.
சில நேரங்களில் சில சொற்கள்
சுவர்கள்.
சில கதவுகள்.
வாழ்க்கைப் பயணத்தில்
வழி நெடுகிலும் சில கண்ணிவெடிகள்
கை கால் பட்டாலே ரத்தக்களறி.
வாழ்வின் நெடுஞ்சாலைகளில்
கனிமரங்களும் உளதே.
பசியைப் போக்கவே
பழுத்திருக்கும் சொற்கள்.
பாலைப்போலவும் சொற்கள்
பாலகர்களுக்கு ஊட்டமளிக்கும்.
பாலை போலவும் சொற்கள்
ஒட்டகங்களுக்கே உகந்ததாக!
வாழைப்போலவும் சொற்கள்
வளர்த்திடும் தலைமுறைகள்
வாளைப்போலவும் சொற்கள்
வீழ்த்துவதே நோக்கமாக..!
ஆடை விலக்கும் சொற்களின்
ஆன்ம அர்த்தங்களுள்
வழிந்துக் கொண்டிருக்கிறது
வருத்தமொன்று!
அது......
வயற்காடுகளில்
வெட்டியான்களும்
வந்தமர்ந்து கொள்ள.........
மயானங்களிலும்
உழுதுக்கொண்டிருக்கிறார்கள்
மானுடத்தின் சில விவசாயிகள்.
- இப்னு ஹம்துன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|