 |
கவிதை
எல்லோரும் வாழுதற்கே இப்னு ஹம்துன்
எல்லோரும் வாழுதற்கே இறையை வேண்டி
இனிதாக நாளொன்றை தொடங்க வேண்டும்
நல்லோரும் வல்லோராய் நிலத்தில் வாழ
நியாயத்தைப் பேசுகின்ற நேயம் வேண்டும்
இல்லாமை கல்லாமை இல்லா திருக்க
உள்ளதையும் பகிர்கின்ற உள்ளம் வேண்டும்.
நில்லாமல் சுற்றுகின்ற பூமி தன்னில்
நேரத்தை மதிப்பிட்டே வாழ வேண்டும்.
ஆண்டுகளும் ஓடுவதையே அறிந்திருந்தும்
ஆன்மத்தை அறியாமல் வாழ்ந்திருந்தோம்
நீண்டதல்ல இவ்வாயுள் நினைவில் கொண்டால்
நல்லதையே செய்கின்ற எண்ணம் வருமே!
தாண்டுகிற தடையாவும் உலகை வெல்ல
தன்மனத்தை வென்றிடவும் தெரிய வேண்டும்.
வேண்டுகிற யாதொன்றும் தவறா என்றால்
.விளைவுகளின் அறுவடையில் வைத்திருக்கும்.
ஆதத்தின் சந்ததிகள் அனைவர் மீதும்
அருளையே பொழிதற்கு இறையை வேண்டி
வேதத்தின் பேர்சொல்லி வேட்டு வைக்கும்
விளங்காத மனிதரெல்லாம் விலங்கு என்போம்.
பேதத்தால் மனிதரையே பிரித்து வைக்கும்
புண்மனத்தார் எவரையுமே பேய்கள் என்போம்
நீதத்தை கூறுவைக்கும் இவரைத் துரத்தி
நலங்காணும் உலகத்தை நனவு செய்வோம்.
(எண்சீர் ஆசிரிய விருத்தம்)
- இப்னு ஹம்துன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|