 |
கவிதை
நான்கு மூலைகளிலும் சபிக்கப்பட்ட வாழ்க்கை...! எம்.ரிஷான் ஷெரீப்
கருணை வழிந்தோடும்
இடுங்கிய விழிகளினூடு
எதுவும் இயலாதவளாக
என்னைப் பார்க்கிறாய்!
காலம் சுழற்றியடித்துச்
சுருங்கிய உடலோடு,
விபத்துக்குள்ளான - உன்
பேரனைப் பார்த்துப்போக
கடன்வாங்கித் துரிதகதியில்
தலைநகர் வந்ததாக
காவல்துறையிடம் கெஞ்சுகிறாய்!
அழகாயிருந்த வாழ்க்கையின்
நான்கு மூலைகளும் சபிக்கப்பட்டு
நாறடிக்கப்பட்டிருக்கும் போது
மன்றாடியென்ன பயன்...?
மன்னித்துக்கொள் தாயே...!
உன் பனையோலைப்பையின்
ஒவ்வொரு இடுக்காய்த் தேடியும்
கைக்குட்டைச் சில்லறைகளையும்
பனங்கிழங்குகளையும் தவிர
வேறெந்த ஆயுதத்தையும்
இவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை...!
காவல்துறை வாகனத்தில்
கைப்பிடித்து ஏற்றப்படுகின்றாய்...
என்ன செய்ய...?
நீ மூதாட்டிதானெனினும்
அடையாளஅட்டையில்லையெனில்
உன்னை வதைப்படுத்தி விசாரிக்காமல்
விடமாட்டார்கள் - உன்
நெற்றியில் பொட்டிருக்கும் காரணத்தால்...!
- எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|