 |
கவிதை
நிர்ப்பந்தப் பொய் சி.வ.தங்கையன்
சொல்லப்படும் அறிகுறிகள்
சீக்குகள் எதனோடும்
பொருந்திப் போகாததால்
பெரிதும் குழம்பிய மருத்துவர்
எழுதிக் கொடுத்த மருந்துகள்
எந்தப் பலனும் தந்ததாய்
தெரியாத போது
எதார்த்தமாய்
எதிர்ப்படுகையில்
"நலந்தானா?" என
நண்பர் கேட்டார்.
"நலம்தான்" என்று
அறியாமலே சொன்னான் பொய்யை
அவன்.
கல்யாண வீட்டில்
கைகளைக் கழுவாமலே
சாப்பிட வேண்டும் என்பது
சகஜமாகிப் போனது.
முட்டைக் கோசு கறி
சாம்பார் என்றோர் சங்கடம்
சகிக்க முடியாத ரசம்
கைக்குழந்தை வாந்தியை
ஞாபகப் படுத்தும் மோர்
இவைகளெல்லாம்
இணைந்த மணத்துடன்
இருக்கும் தண்ணீர்க் குவளை.
வேறு வழியின்றி விழுங்கிவிட்டு
வெளியே வரும்போது
"விருந்து(?) நன்றாய் இருந்ததா?" என
விசாரித்துத் தொலைக்கிறார்
கல்யாண வீட்டுக்காரர்
கனிவான குரலுடன்.
"அற்புதம்" என்று
அறிந்தே பொய் சொல்கிறேன்
நான்.
இப்படியாக
நிர்ப்பந்தம் யாரும் செய்யாமல்
நிர்ப்பந்தப் பொய் சொல்ல
நேர்ந்து விடுகிறது
சில நேரம்!
- சி.வ.தங்கையன், பட்டுக்கோட்டை. ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|