 |
கவிதை
இரட்டைக்கால் சிலுவை சுகிர்தராணி
இரட்டைக் கால்களுடன் நிற்கிறது
விநோதமாய் சிலுவைமரம்
கயிறுகளைக் கொண்டு உயர்த்தப்படும்
என் தலையில் சுற்றப்பட்டிருக்கிறது
உபயோகமற்ற லங்கோட்டுத்துணி
உதடுகளில் சிவப்பு வண்ணம்.
என்கால்களும் விரிக்கப்பட்டு
கிளைமுறியும் விசையுடன்
இறக்கப்படுகின்றன ஆணிகள்
நெருப்புக் குழம்பெனப் பரவுகிறது
செஞ்சூடான இரத்தம்
நான் எதையும் முணுமுணுக்கவில்லை
மலையின் நெளிந்த பாதையில்
நீண்டிருக்கிறது வரிசை
அவரவர் விரும்பியபடி
ஆணிகளால் நிரப்பப்படுகிறது
என்னுடல்.
நிர்வாணம் கரைந்த புளிப்புநீர்
வாயில் பட்டதும்
என் திரைச்சீலை இரண்டாகக் கிழிகிறது
திருப்தியுடன் திரும்பிச் செல்லும்
உம்மை எதிர்கொள்கின்ற
சந்ததியின் குறிகளிலெல்லாம்
ஆணித் தழும்புகள்.
- சுகிர்தராணி
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|