 |
கவிதை
ஆதித்தாயின் கைரேகை சுகிர்தராணி
ஒளியூடல் கொண்ட அப்பிரதேசத்தில்
என்பெயர் அழைக்கப்பட்டவுடன்
முகத்திலறையும் காற்றைப்
பருகியபடி நுழைகிறேன்
பாம்புகள் இணைந்தடங்கும்
ஓசையினும்
மெலிந்துவிடுகிறது என்குரல்
ஆழ்கடலின் குளிர்நீரோட்டத்தை
ஒத்தாயிருக்கிறது
என் நடையின் சாயல்
ஆடைக்கிழிசலைக் கையால்
மறைக்க முயன்று தோற்கும்
சிறுவனின் மருட்கை
என் தோலில் படிந்திருக்கிறது
கொடிகள் பின்னிய வழி
முற்றுப்பெற நிமிர்ந்து பார்க்கிறேன்.
கல்லாய் சமைந்து நிற்கிறது
ஆசிர்வதிக்கப்பட்ட அவ்விருட்சம்
ஆயிரமாயிரம் காலஅழுத்தம்
அதன் கண்களில் வழிகிறது
உடல் முழுவதும்
காலொடிந்த குகை ஓவியங்கள்.
குறிப்பெடுத்துக் கொண்டு திரும்பும்
என் கைகளில் சிவந்த பழமொன்று.
அதில் அழுத்தமாய் படிந்திருந்தது
ஆதித்தாயின் கைரேகை.
- சுகிர்தராணி
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|