 |
கட்டுரை
தழும்புகள் சுகிர்தராணி
எப்போதும் நீர்கசிந்து கொண்டிருக்கும்
என் வண்டல்நிலம்
பகற்சுழலில் பறக்கும் புழுதியாய்
பக்கவாட்டில் உழப்படுகிறது
உருண்டையென உப்பிப்பருத்த விதைகள்
சீரான இடைவெளியில் ஊன்றப்படுகின்றன
ஈரம் பிழிந்தெடுத்த துகள்கள் குவிய
என்னிலிருந்து வெடிக்கின்றன முளைகள்
உள்நீளும் வேர்களின் கைகளுக்குள்
கெட்டிமைப்படும் எனதுமண்
மூச்சடைப்பும் உயிர்ப்புமாய் திரள்கிறது
செழித்தோங்கிய விருட்சங்களின் கனிகள்
நீண்ட காம்புடைய வலைப்பைகளால்
பறிக்கப்படுகின்றன
பருவங்கள் சுழலச் சுழல
காய்ந்து உதிர்ந்த மரங்கள்
கவனமாய் தோண்டப்படுகின்றன
குன்றும் சரிவுமாய் உருமாறிவரும்
என் நிலத்தின்
அகழ்ந்தெடுத்த இடத்திலெல்லாம்
பிரசவத் தழும்புகள்
- சுகிர்தராணி
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|