கீற்றில் தேட...

 

பட்டம் விடுவது

பம்பரம் சுற்றுவது

விடியும் பொழுதெல்லாம்

விளையாட்டுக்களிலும்

அதைப் பற்றிய நினைவுகளிலும்

கழியும்

பள்ளிக் கூட வாத்தியாருக்கு

இடது கையால்

வணக்கம் வைத்து

வாங்கிக் கட்டிக் கொள்வது

சிதறுதேங்காய்க்காக

சண்டையிடுவது

தோட்டத்து மாமரத்தில்

கல்லெறிவது

குளத்தில் பனங்காயை

தூக்கி எறிந்து

அதைத் தொட

சகாக்களுடன்

போட்டியிட்டு நீச்சலடிப்பது

இளவட்ட பசங்களின்

சேஷ்டைகளை ரசிப்பது

அவர்களின் காதலுக்கு

தூதுவனாக இருப்பது

விரக்தி ஏற்படும் தருணங்களில்

பால்யத்தின் கனவுகளை

அசைபோட்டவாறு இருப்பது

எனது சுயமீட்சியைச் சாத்தியப்படுத்தும்

அம்புப்படுக்கையில் இருக்கும்

பீஷ்மரைப் போல்

வாழ்க்கை கொடிய கணைகளால்

எனது நெஞ்சத்தைத் தைத்தது

ஓர் நாள்

விடாது பெய்த மழையில்

நனைய யோசித்த பொழுதே

எனது பால்யம் தொலைந்தது.