எனது கழிவறையை
நானே கழுவுகிறேன்
அவ்வப்போது
உண்ணா நோன்பிருக்கிறேன்
உடல் மெலிவதற்கு
பருத்தி ஆடைகளை
தேடி அணிகிறேன்
வெய்யிலைத் தணிக்க
கழி ஒன்று வாங்கி
வைத்திருக்கிறேன் பாசத்தில்
வழுக்காமலிருக்க
உடம்பிலுள்ள உப்புக்கென
துள்ளல் நடையும் பயில்கிறேன்
எத்தனை முறை அடி விழுந்தாலும்
அனைத்தையும் வாங்கிக்கொண்டு
அமைதியாகத்தானிருக்கிறேன்
இனமே அழிக்கப்பட்ட போதும்
வன்முறை தீர்வாகாது
என்று கூறித்திரிகிறேன்
இப்போது
அரையினும் கூடுதல்
நிர்வாணம் காண்பித்து
சுதந்திரமும் வேண்டி நிற்கிறேன்
யார் சொன்னது
நான் காந்தியை
மறந்து விட்டேனென்று..?!
-
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
நிர்வாணா
- விவரங்கள்
- சின்னப்பயல்
- பிரிவு: கவிதைகள்