மண்வாசம் வரும் போது
தூரத்தில் மழை பெய்கிறதா
என வானத்தை
நோக்குகையில்
புழுதியைக் கிளப்பியவாறு
செல்கின்றன
மணல் லாரிகள்
***
வேண்டுதல்
தினமும் வேண்டிக் கொள்கிறது
கோயில் யானை
அங்குசமில்லா வாழ்வு
***
யதார்த்தம்
உதாசீனப்படுத்த
முடியவில்லை
உதாசீனம் ஏற்படுத்திய
வலியை
***
கள்ளமௌனம்
பேசாமல் போகிறாய்
நானும்
பேசாமல் போகிறேன்
ஆங்கே...
அகங்கார வேலிக்குப் பின்
ஏங்கித் தவிக்கின்றன
வார்த்தைகள்
***
நேசம்
நம் கைகளில்
எப்போதும்
ஒரு நேசம் இருக்கிறது
ஆனால் நாம் தான்
இறுக மூடியிருக்கிறோம்
கைகளையும்
மனதையும்
***
தவம்
பற்றற்றல்
தவப்பலன்
இறுகப் பற்றுதல்
தவம்
- பா.சிவகுமார்