சனி என்பது சூரியனை ஆறாவது கோளாக சுற்றி வருகிறது. அது மட்டுமல்ல, சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்தபடியான பெரிய கோள் சனிதான். சனி என்பது பழங்கால ரோமனிய விவசாயக் கடவுளின் பெயராகும். சனிக்கோளின் வானவியல் சின்னம், ரோமானிய விவசாயக் கடவுளின் சின்னமான அரிவாள்தான்.

இரவு வானில் சூரியக் குடும்பத்தின் 5 உறுப்பினர்களை வெறும் கண்ணால் எந்த கருவியும் இன்றி பார்க்க முடியும். அவைகளில் ஒன்றுதான் சனிக் கோள். நம் மூதாதையர்களும், இதனை வெறும் கண்ணால் பார்த்தனர். கண்ணால் பார்க்கும் கோள்களில் இதுதான் தொலைவில் உள்ளது என்றும் தெரிந்து கொண்டனர். சனிக்கோள் மஞ்சள் நிறத்தில் மின்னாமல் பளிச்சென்று தெரியும். பூமியிருந்து பார்க்கும்போது வானில் தெரியும் கோள்களில் மூன்றாவது பிரகாசமான கோள் சனி. சனிக்கோளை வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே மனிதர்கள் பார்த்து வந்திருக்கின்றனர்.

sani_620

கலிலியோவும், சனிக்காதும்..!

தொலைநோக்கி மூலம் முதன் முதல் 1610 ஆம் ஆண்டு சனிக்கோளை பார்த்தவர் கலிலியோ தான். சனிக்கோளை வானில் நோக்கிய கலிலியோவுக்கு பிரமிப்பே மிஞ்சியது. காரணம் அதன் வித்தியாசமான தோற்றம்தான். ஆனால் அதனைப் பார்த்து ரொம்பவே குழம்பிவிட்டார். பின்னர்தான் இது என்னடா, இரண்டு பக்கமும் காது போன்ற தோற்றம் உடையதாய் இருக்கிறதே என்று அதன் வளையங்களைப் பார்த்து திகைத்தார். ஏனெனில் அவரது தொலை நோக்கி சிறியதாக இருந்ததால், வளையங்களின் அமைப்பு சரியாகத் தெரியவில்லை.அந்த காதுகள்தான் சனியின் வளையங்கள் என்றும், அவை பனிக்கட்டிகளால் ஆனவை என்றும் அவருக்கு அப்போது தெரியாது. பிறகே அவை சனியின் வளையங்கள் என்று தெரிந்து கொண்டார்.

தட்டை துருவங்கள்..!

சனிக்கோள் வியாழனுக்கும், நெப்டியூனுக்கும் இடையில் சுற்றிக்கொண்டு இருக்கிறது. இது சூரியனிடமிருந்து 140 கோடி கி.மீ. (1,400,000,000௦௦௦ கி.மீ ) தொலைவில் உள்ளது. இது 9 வானவியல் அலகு ஆகும். ஒரு வானவியல் அலகு என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள 14.9 கோடி கி.மீ.தொலைவுதான். சனி இருக்கும் தூரம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரத்தைப் போல சுமார் 9 மடங்கு. சனியின் நடுக்கோட்டு விட்டம் 120,536 கி.மீ. சனியின் விட்டமும் கூட பூமியைப் போல சுமார் 10 மடங்கு. எனவே இதில் வரிசையாக 9 பூமிகளை நிற்க வைக்கலாம். உள்ளே தூக்கிப் போட்டு அடக்கலாம். அவ்வளவு பெரியது. ஆனால் சனிக்கோளின் துருவங்கள் தட்டையான பந்து/ஆரஞ்சு போல காணப்படுகிறது. துருவங்களில் விட்டம் 108,728 கி.மீ தான்.

சனிக்கோள் மிக வேகமாக சுற்றுவதால்தான் துருவப்பகுதிகள் தட்டையாகிவிட்டன என்றும் சொல்லப்படுகிறது. சனிக்கோள் மட்டுமல்ல, சூரிய குடும்பத்தின் வியாழன், யுரேனஸ், நெப்டியூன் மற்றும் அனைத்து வாயுக் கோள்களின் துருவங்களும் தட்டையாகவே உள்ளன. பாறைக் கோளான நம் பூமியின் நிலையும் அதுதானே. சனிக்கோளின் அடர்த்தி நீரின் அடர்த்தியை விட மிகவும் குறைவு. எவ்வளவு தெரியுமா? சனியின் அடர்த்தி 0.69 தான். நீரின் அடர்த்தி 1. சூரிய குடும்பத்தில் மிக மிக அடர்த்தி குறைவான, மிகவும் லேசான கோள் சனி மட்டுமே. பூமியின் அடர்வு 5.32. இதிலுள்ள ஹைடிரஜனும், ஹீலியமும்தான் இதன் அடர்த்தி குறைவுக்கு முக்கிய காரணி. நீங்க சனிக்கோளை தூக்கி கடலில் போட்டால், இடுப்பு ஒட்டியாணம் மாட்டிக் கொண்ட சனிக்கோள், நீரில் ஜம்மென்று ஓர் ஆரஞ்சு பழம் போல மிதக்கும்.

சனியிலிருந்து சூரியனைப் பார்த்தால், நாம் பூமியிலிருந்து பார்ப்பதைப் போல பிரகாசமாக இருக்காது. ஒரு பிரகாசமான விண்மீன் போலவே தெரியும். சனிக்கோளில் பூமியில் தெரியும் சூரிய ஒளியில் 1% மட்டுமே தெரியும். உங்களின் எடை பூமியில் 70 கிலோ என்றால், சனியில் 75 கிலோ.

பூமி தன அச்சில் 23 .5 பாகை சாய்ந்துள்ளது. அது போலவே சூரிய குடும்பத்து அனைத்து கோள்களும் தன் அச்சில் சாய்ந்தே உள்ளன. சனிக் கோளும் தன் அச்சில், 26.73 பாகை சாய்வாகவே சூரியனைச் சுற்றி வருகிறது. நம் பூமியின் கணக்குப்படி சனிக் கோள் ஒரு முறை தன்னைத் தானே சுற்ற 10 மணி, 32 நிமிடம் 35 நொடிகள் ஆகிறது. இந்த துல்லியமான தகவல் 2007 செப்டம்பரில் விண்கலங்கள் வாயேஜர், புரோப் மற்றும் கசினி மூலம் அறிந்தது. இதுதான் சனியின் ஒருநாள் என்பதாகும். ஆனால் பொதுவாக சனியின் ஒரு நாளின் நேரம் என்பது காலப் போக்கில் மாறுகிறது என்பதனை கடந்த 25 ஆண்டுகளில் அறிந்துள்ளனர். முன்பு சனியின் ஒரு சுற்றலின் நேரம் 10 மணி 39 நிமிடம் ஆக இருந்தது. பின்னர், அதன் வேகம் 10 மணி 45 நிமிடம் ஆகிவிட்டது. சனி ஒரு முறை சூரியனைச் சுற்றிவர நம் பூமி நேர கணக்கில் 29 ஆண்டுகள், 167 நாட்கள், 6 மணி மற்றும் 40 நிமிடங்கள் ஆகின்றன. ஆனால் சனிக்கோளுக்கு இது ஓர் ஆண்டு தான்.
 
சனியின் மையப்பகுதியில் இரும்பு, நிக்கல் மற்றும சிலிகனும் ஆக்சிஜனும் கலந்த பாறை இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனைச் சுற்றி உலோக ஹைடிரஜன் உள்ளது. சனிக்கோளின் மேலுள்ள வாயு பகுதிக்கும் பாறைக்கும் இடையில் திரவ ஹைடிரஜனும், திரவ ஹீலியமும்தான். சனிக்கோளின் உள்ளே இருக்கும் உலோக ஹைடிரஜன்தான் மின்னேற்றத்தை உற்பத்தி செய்து சனிக்கோளின் காந்தப் புலத்தை உருவாக்குகிறது. ஆனால் சனியின் காந்தப்பரப்பு, பூமியின் காந்தப் பரப்பை விட பலவீனமானது. வியாழனின் காந்தப் பரப்பில் இருபதில் ஒரு பகுதிதான் (20 :1) சனியின் காந்தப் பரப்பு.

சனியின் வளிமண்டல வெப்பநிலை அதிக பட்சம் -130 °C லிருந்து -191 °C. வரை. இதன் வெளியே இவ்வளவு குளிராக இருக்கிறதே என்று இதைப் பற்றி கொஞ்சம் குறைவாக எடை போட்டு, இது மிக அமைதியான கோள் என நினைத்து விட வேண்டாம். மேற்பரப்பில்தான் குளிரும் உறைபனியும். இதன் உள்ளே மையம் பூமி போலவே கொதித்துக்கொண்டுதான் இருக்கிறது. அதன் உட்பகுதி வெப்பம் என்ன தெரியுமா? 12,000°C .வெப்பம்.

சனி தான் சூரியனிடமிருந்து பெற்ற வெப்பத்தைவிட 2.5 மடங்கு அதிக கதிர்வீச்சு ஆற்றலை அதன் மேற்பரப்பிலிருந்து வெளியிடுகிறது. பெற்ற வெப்பத்தை விட அதிகமாக எப்படி வெளிவிட முடியும்? இது எப்படி? சனியினுள் உருவாகும் அதிகப்படியான ஆற்றல், அதன் மெதுவான ஈர்ப்புவிசை அழுத்தத்தினால், கெல்வின்-ஹேல்ம்ஹோல்ட்ஸ் செயல்பாடு(Kelvin–Helmholtz mechanism) மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. சனியின் அதிகப்படி ஆற்றலுக்கு இது மட்டுமே காரணி அல்ல. இதற்குள்ளே வேறொரு செயல்பாடும் நடந்து கொண்டிருக்கிறது. சனியின் உள்ளே உள்ள ஹீலியம் துகள்கள் மழையாகப் பொழிந்து வெப்பத்தை தக்கவைத்துக் கொள்கின்றன.

sani_1_620

சனிக் கோளின் வளிமண்டலத்தில் காற்று உள்ளது. இது சூறைக்காற்று போல, எப்போதுமே மணிக்கு 1800 கி.மீ வேகத்தில் காற்று வீசிக்கொண்டு இருக்கிறது. பூமியிலிருந்து அனுப்பட்ட வாயேஜர் (Voyager) விண்கலம்தான் சனியின் வளிமண்டலத்தில் கிழக்கு நோக்கிய காற்றின் வேகத்தை கண்டுபிடித்தது. நம் சூரிய குடும்பத்தில் அதிக வேகத்தில் காற்று வீசும் கோள் சனி மட்டுமே. 2007ல் செலுத்தப்பட்ட கசினி (Cassini) விண்கலம், சனிக்கோளின் வடபகுதி யுரேனஸ் போலவே, அழகிய நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் நீல நிறத்தில் மின்னுகிறது என்பதை தெரிவித்தது. ரெலைக் என்ற பிரிட்டிஷ்க்காரர் தான் முதலில் சூரியன் மறையும் தருவாயில் மின்காந்த கதிர்வீச்சு அல்லது ஒளிச்சிதறல் மூலம் ஒலியலைகளை விட சிறிய துகள்கள் இந்த நீல நிறத்தை உருவாக்குவதைக் கண்டறிந்தார். அதனால் இந்த சிதறலுக்கு ரெலைக் சிதறல் (Rayleigh scattering) என்று பெயர். மேலும் துருவங்களில் துருவ வொர்டெக்ஸ்( warm polar vortex,) என்ற புயல் உருவாகிறது. இது சூரிய குடும்பத்தில் சனிக்கோளில் மட்டுமே நடக்கிறது. அங்கே வெப்பநிலையும் உச்சத்தில் 122°C என இருக்கும் என்றும் அறியப்பட்டுள்ளது. இந்த வெப்பநிலைதான் சனிக்கோளின் அதிக பட்சமாக கோடையின் வெப்பமாகும்.
 
அறுகோண மேகம்..!

சனிக்கோளின் வடதுருவ வொர்டெக்ஸைச் சுற்றி ஓர் அறுகோண அமைப்பு மேகமும் காணப்படுகிறது. இதனைக் கண்டுபிடித்தது நாம் செலுத்திய விண்கலமான வாயேஜர்தான். ஆனால் தென் துருவத்தில் வொர்க்டெக்ஸோ, அறுகோண மேகமோ கிடையாது. இங்கே, நம் கடலில் சூறாவளி உருவாகும்போது ஒரு கண் இருப்பது போன்ற கண் அமைப்பு தென் பகுதியில் தென்படுகிறது.
 
வாயுக் கோளத்தின் வாயுக்கள்..!

சனிக்கோளில் 96.3% ஹைடிரஜன் வாயுவும், 3.25% ஹீலியமும் உள்ளது. மேலும் 0.05% அளவு மீத்தேன் மற்றும் கொஞ்சூண்டு அம்மோனியாவும் (ammonia,) அசிட்டிலீன் (acetylene), ஈத்தேன் (ethane), புரொப்பேன் (propane), பாஸ்பைன் (phosphine) மற்றும் மீத்தேனும் (methene) சனியின் வளிமண்டலத்தில் உள்ளன, அதனால் தான் சனி இவ்வளவு லேசாக இருக்கிறது.

சனியின் வளிமண்டல் மேகங்களில் பூமி போலவே மின்னல்கள் உருவாகின்றன. அதன் அதிர்ச்சி என்பது, பூமியில் உருவாவதைப் போல பல கோடி, கோடி மடங்கு அதிகம். நம் பூமி 23.5 டிகிரி சாய்வாக உள்ளதால் பருவ காலங்கள் வருகின்றன. அது போலவே, சனியிலும் பருவகால மாற்றங்கள் உண்டு. அதன் காரணி சனி தன் அச்சில் 26 டிகிரி சாய்ந்திருப்பதே.

பூமியில் ஏற்படுவது போலவே, சனியிலும் அதன் பெரிய துணைக்கோளால் கிரகணம் உண்டா கிறது. சிறு கோள்களால் துணைக்கோள் நகர்வு (Transit)தெரிகிறது.

சனியின் வளையங்கள்

சனியின் நடுகோட்டுப் பகுதியில்தான் இந்த வளையங்கள் காணப்படுகின்றன. வியாழன், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்களில் வளையங்கள் இருந்தாளும் கூட, அவை சனியில் இருப்பதைப் போல் அவ்வளவு தெளிவாக, அழகாக தெரிவதில்லை. சனியின் வளையங்கள் அதன் நடுக்கோட்டுக்கு மேலே 6,630 கி.மீ.லிருந்து 120,700 கி..மீ தூரம் வரை விரவிக்கிடக்கின்றன. ஆனால் அவற்றின் கனம் வெறும் 23 மீட்டர் மட்டுமே. சனிவளையங்களின் பொருட்கள் வளையங்களில் 93% பனியின் துகள்களாலும், பாறைத் துணுக்குகளாலும், மீத்தேன் தூசுகளாலும் ஆனவை. மீதி 7% அமார்பாஸ் கார்பன் (amorphous carbon). அந்த துகள்களின் அளவு குட்டியூண்டு துகள்களிருந்து அதிக பட்ச அளவு 10 மீ. சில இவற்றை சின்ன தொலை நோக்கியால் கூட அழகாக காணமுடியும். கொஞ்சம் பெரிய தொலைநோக்கி என்றால் சனிக் கோளின் நிறைய வளையங்களைக் காணலாம்.

கலிலியோவிற்கு அடுத்தபடியாக இந்த வளையங்களை 1655ல் பார்த்து அவைகளுக்கு விளக்கம் சொன்னவர் கிறிஸ்டியன் ஹைஜீன்ஸ் ( Christiaan Huygens). சனிக்கோள் உருவானபோதே இதன் வளையங்களும் உருவாகி இருக்க வேண்டுமென்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த வளையங்கள் ஒருகாலத்தில் சனியின் துணைக்கோளாய் இருந்து மோதி உடைந்ததின் மிச்ச சொச்ச துண்டுகளே இப்படி வளையமாய் சனியைச் சுற்றி உள்ளன என்றும் தெரிவிக்கின்றனர். சனியின் வளையங்களை எப்போதும் காணமுடியாது.

சில சமயம் அவை படுக்கை வசத்தில் இருந்தால் வளையம் ஒரு கோடு போல இருக்கும். அப்போது வளையங்கள் நமக்குத் தெரியாது. 2008-2009ல் அவ்வாறு வளையங்கள் மறைந்து போயின. இனி மீண்டும் 2024-2025 ஆண்டுகளிலும் சனியின் வளையம் காணாமல் போகும். மீண்டும் மீட்கப்படும்.

சனியின் துணைக்கோள்கள்..!

சனிக்கோளுக்கு இதுவரை 62 துணைக் கோள்கள்/சந்திரன்கள் இருப்பதைக் கண்டுபிடித் துள்ளனர். இவற்றில் 20 சந்திரன்கள் வரை கசினி விண்கலத்தால் கண்டுபிடிக்கப் பட்டன. இவற்றில் 53 சந்திரன்/ நிலாவுக்கு பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. அவைகளுள் மிகப் பெரிய துணைக்கோள் டைட்டான்(Titan) தான். இதுதான் சனியின் சுற்றுப்புறத்திலுள்ள பொருள்களில் 90% நிறையைத் தன்னகத்தே கொண்டுள்ளது. சனியின் வளையங்களையும் சேர்த்துத்தான் இந்த கணக்கு. இந்த டைட்டன் துணைக்கோள், நம்ம சூரிய குடும்பத்தின் முதல் புதல்வன் புதனை விடப் பெரியது. அது மட்டுமல்ல, சூரிய குடும்பத்தின் இரண்டாவது பெரிய துணைக்கோள். முதல் பெரிய துணைக்கோள் வியாழனின் கனிமேடுதான். டைட்டனின் வளிமண்டலத்தில் கனமான நைட்ரஜன் நிரம்பி இருக்கிறது. ஒரு காலத்தில் நம் பூமியில் உயிரினம் உருவாகாதபோது இருந்த மாதிரியே இதுவும் இன்று இருக்கிறது. நம் பூமியின் வளிமண்டலம் 60 கி.மீ உயரம் வரை விரிந்துள்ளது. ஆனால் டைட்டனின் வளிமண்டலம், பூமியைப் போல 10 மடங்கு பெரியது. சனியின் அடுத்த இரண்டாவது பெரிய நிலாவின் பெயர் ரியா(Rhea). இதில் மிக மெல்லிய வளையமும், குறைவான வளிமண்டலமும் உள்ள நிலா. மற்ற நிலாக்கள் ரொம்ப சிறியவை. 34 நிலாக்கள் 10 கி.மீ விட்டம் மட்டுமே உள்ளவை. பெரும்பாலான நிலாக்களுக்கு, டைட்டனின் கிரேக்க புராணப்படியே பெயர் சூட்டப்பட்டுள்ளது. சூரிய குடும்பத்தில் பெரிய வளிமண்டலம் உள்ள துணைக்கோள் டைட்டன் மட்டுமே. இதில் தான் ஹைடிரோகார்பன் ஏரி உள்ளது. சனியின் துணைக்கோள்களில் ஒன்றான என்சிலாடஸ் (Enceladus) எதிர்காலத்தில் நுண்ணுயிர்கள் வர வாய்ப்பு உள்ள இடம் என்றும் சொல்லப்படுகிறது .
 
சனியை அறிய அனுப்பிய விண்கலங்கள்..!

சனியின் வளிமண்டலம், அதன் வளையங்கள், துணைக்கோள்கள் பற்றி அறிய, அதனை நோக்கி நான்கு விண்கலங்கள் செலுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க நாசாவின் பயோனிர் 11 (Pioneer 11) என்ற விண்கலம்தான் முதன் முதலில் 1979ல் சனிக்கோளைப் போய் எட்டிப்பார்த்து கதை பேசிவிட்டு வந்தது. பின்னர் வாயேஜர் 1 (செப்டம்பர் 12, 1980) மற்றும் வாயேஜர் 2 (August 25, 1981) விண் கலன்கள் அனுப்பப்பட்டன. கசினி (Cassini) விண்கலம 2004ல் செலுத்தப்பட்டது. இது இன்னும் சனியைச் சுற்றி வருகிறது. சனியின் இரவுப்பக்கம் கசினி சென்றபோது, வெளிச்சம்படாத சனியின் இந்தப் பகுதி நியான் விளக்கு போல மின்னியது. அதன் வளையங்கள் அழகான நிறங்களில் மினுக்குகின்றன. இது மின்னலடிக்கும் நீலம், மரகதப் பச்சை, புதினா பச்சை என பல வண்ணங்கள் காட்டி நம்மை மயக்குகின்றன. சூரிய ஒளி படாத இந்தப் பகுதியில் சனியின் உள் வெப்பமே இந்த ஒளியை உருவாக்குகிறது.

Pin It

உங்களுக்கு  இரண்டு சூரியன் உள்ள சூரிய மண்டலம் தெரியுமா? இப்போது கெப்ளர் விண் தொலைநோக்கியின் உதவியுடன் இரண்டு சூரியன்களை மையமாகக் கொண்டு சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு சூரிய குடும்பத்தை செப்டம்பர், 2011ல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள‌னர். அதன் பெயர் கெப்ளர் 16b (Kepler-16b).

ஒரு கோளும்..இரு சூரியன்களும்..!

நாசா வானவியல் ஆய்வு மையம் கெப்ளர் விண் தொலைநோக்கியை விண் ஆராய்ச்சி நிலையத்தில் வைத்து அனுப்பி உள்ளது. நம் பால்வழி மண்டலம் பற்றி ஆராயவும் அதனைத் தாண்டி, நீண்ட தொலைவு சென்று பிரபஞ்ச ரகசியம் பற்றி அறியவும்தான் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த கெப்ளர் விண் தொலைநோக்கிதான், இரட்டை சூரியன்கள் உள்ள சூரிய குடும்பத்தைக் கண்டுபிடித்துள்ளது. ஒன்றல்ல, இப்படி இரட்டை சூரியன்கள் உள்ள இரு சூரிய குடும்பம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தகவலை 2012 ஜனவரி 12ம் நாள், சான் டியாகோ மாகாண பல்கலைக் கழகத்தைச் (San Diego State University) சேர்ந்த விஞ்ஞானி வில்லிய வெல்ஷ் (William Welsh ) அமெரிக்க வானவியல் கழகத்தில் இயற்கை (journal Nature)என்ற பத்திரிக்கைக்காக பேட்டி கொடுத்து வெளியிட்டார். 
 
இரண்டு சூரியன்கள் ஒரே மையத்தில்..!

sunsஅது என்ன இரட்டைச் சூரியன்கள்? நம் சூரிய குடும்பத்துக்கு மைய நாயகன் சூரியன். ஓர் ஒற்றைச் சூரியன் மட்டுமே. ஆனால், இப்போது கண்டுபிடித்துள்ள சூரியகுடும்பத்துக்கு இரண்டு சூரியன்கள். அதாவது, சூரியகுடும்பத்தின் மைய நாயகர்கள் இரு சூரியன்களாக இருப்பார்கள். இரண்டு சூரியன்களை மையமாகக் கொண்டு அதன் கோள்கள் அவற்றை சுற்றி வருகின்றன என்ற தகவல் கிடைத்துள்ளது.

இன்று புதிதாய் பிறந்தோம்..?

அதோடு இரண்டு புதிய கோள்களையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். கண்டுபிடித்த இரண்டு புதிய கோள்களின் பெயர்கள்: கெப்ளர் 34b,கெப்ளர் 35b (Kepler-34b and Kepler-35b). இந்த கெப்ளர் 34b கோள், நமது வியாழனின் நிறையில் 22% மும், அதன் விட்டத்தில் 76%மும் கொண்டது. இது, தனது இரண்டு சூரியன்களை 289 நாட்களில் வட்டமிடுகிறது. அந்த இரண்டு சூரியன்களும் என்ன செய்கின்றன தெரியுமா?அவை ஒன்றையொன்று சுற்றி முடிக்க 28 நாட்கள் ஆகின்றன. அடுத்து உள்ள 35b கோள் நம் வியாழனில் 13% நிறையும், 73% விட்டமும் உடையது. அது அதன் மையத்தில் உள்ள இரு சின்ன சூரியன்களை 131 நாட்களில் சுற்றி வருகிறது. அந்த சின்ன சூரியன்கள் நம் சூரியன் அளவில் ஒன்று 80% நிறையும், இன்னொன்று 89% நிறையும் கொண்டிருக்கிறது.. இந்த 35b கோளுக்கான இரண்டு சூரியன்களும் ஒன்றையொன்று 21 நாட்களில் சுற்றுகின்றன.
 
எங்கே.. காண்பது..?

நாம் இரவில் வானிலுள்ள விண்மீன்களைப் பார்க்கிறோம். அவற்றில் சிலவற்றை நாம் அறிகிறோம். அந்த சில விண்மீன் படலங்களில் ஒன்று வடக்கு வானில் உள்ளது. மேகமற்ற, நிலா ஒளி இல்லாத/குறைவான வானை வடக்கில் அண்ணாந்து பார்த்தால், சிலுவை போன்ற அமைப்பில் ஒரு விண்மீன் படலம் தெரியும். இதனை அன்னம்/ வடக்குச் சிலுவை (Cygnus/Swan) என்று அழைக்கின்றனர். அந்த தொகுதியில்தான் நமது கெப்ளர் விண் தொலைநோக்கி கண்டுபிடித்த இரட்டைச் சூரியன்கள் உள்ள சூரிய மண்டலங்கள் உள்ளன. இது எவ்வளவு தொலைவில் உள்ளது தெரியுமா? 34b கோள் உள்ள சூரிய குடும்பம் பூமியிலிருந்து சுமார் 4,900 ஒளியாண்டு தூரத்தில் இருக்கிறது. 35b கோள் உள்ள சூரிய குடும்பம் 5,400 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது.

இதில் இரண்டு சூரியன்களும் ஒன்றையொன்று மறைத்து கிரகண விளையாட்டை அவற்றின் கோள்களுடன் இணைந்து அவ்வப்போது இரட்டைச் சூரிய மண்டலத்திலும் நடத்துகின்றன.

இரண்டு சூரியன்கள் ஒன்றையொன்று தட்டாமாலை போல் சுற்றுவதால், கோள்கள் பெறும் ஆற்றலின் அளவு பெரிதும் மாறுபடுகிறது. மாறுபட்ட ஆற்றலின் வேகத்தால், அங்கு அதீத மாற்றம் கொண்ட காலநிலைகளும் உலவுகின்றன என்ற உண்மையும் தெரிய வ்ந்துள்ளது. நிறைய வெப்பநிலை மாற்றங்களும், ஓர் ஆண்டில் நிறைய முறை 4 பருவ காலங்களும் உண்டாகின்றன.

இந்த சூறாவளி வளிமண்டல மாற்றம் என்பது அங்கு புதிதாக உயிர்கள் வாழும் சூழல், இரட்டைச் சூரிய சுற்றுக்கோள்களில் உருவாக வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. இது ஒரு சுவையான, தேடல் நிறைந்த தகவலாகும்.

Pin It

 நம் பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரம்தான். ஆனால் நம் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் ஒவ்வொன்றின் ஒரு நாள் நேரமும் வேறு வேறாக இருக்கிறது.

புதன் சூரியனுக்கு மிக அருகில் இருக்கிறது. அதனால் அதன் மேல் சூரியனின் ஈர்ப்பு சக்தி அதிகம் தெரியும். புதன் கோள் ஒருமுறை தன்னைத்தானே சுற்றி முடிக்க நம்ம பூமி நேரப்படி 175.94 நாட்கள்  59 மணி நேரம் ஆகிறது. அதுதான் புதனின் ஒரு நாள் ஆகும். எந்தக் கோளாக இருந்தாலும் சரி தன் அச்சில் ஒருமுறை தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரமே, அந்த கோளின் ஒரு நாள் எனப்படுகிறது.

சூரிய குடும்பத்தில், நம் பூமிக்கு முன்னாடி இருக்குற வெள்ளி கோளின் ஒரு நாள் என்பது நமக்கு 243  நாட்கள் ஆகும்.

earth_370வெள்ளிக் கோளோட ஒரு வருஷமும், ஒரு நாளும் கிட்டத்தட்ட ஒண்ணு தான். வெள்ளி கோளில் ஒரு வருடம் என்பது, ஒரு முறை வெள்ளி சூரியனை சுற்ற எடுத்துக்கொள்ளும் காலம், 224.70 நாட்கள் . இதுதான் வெள்ளிக்கோளின் ஓர் ஆண்டு. ஆனால் அது தன் அச்சில் மிக மிக மெதுவாக சுற்றுவதால் தன் அச்சில் ஒரு முறை சுற்றி முடிக்கவே, கிட்டத்தட்ட ஒரு வருடத்தை நெருங்கி வந்துவிடுகிறது. நம் பூமியோட 243 நாள்தான் வெள்ளி கோளில் ஒரு நாள். அது ஒரு தடவை தன்னோட அச்சிலே சுத்திமுடிக்க 243 நாள் ஆகிறது. ஆனால் ஒரு சூரிய உதயத்துக்கும் அடுத்த சூரிய உதயத்துக்கும் இடைப்பட்ட நாட்கள் 116.75 பூமி நாட்கள்.

அடுத்து நம் பூமியோட ஒரு நாள் என்பது சரியா துல்லியமா 24 மணி நேரம் இல்லை.  23 மணி  56 நிமிடம்  4.1 நொடிகள் தான். நம் பூமியின் துணைக்கோளான சந்திரனின் ஒரு நாள் என்பது நமக்கு 29.53  நாட்கள்.

செவ்வாயின் ஒரு நாள், 24 மணி  37  நிமிடம்  22.66 நொடிகள் தான். செவ்வாயோட சுற்று வேகமும், பூமியோட சுற்று வேகமும் சராசரியா ஒண்ணுதான்.

வியாழன்தான் சூரியக் குடும்பத்திலே வெகு வேகமா  சுத்தற கோள். அதனுடைய ஒரு நாள் என்பது நமக்கு 9 மணி 55 நிமிடம்  33 நொடிகள். இந்த வியாழன் நம்ம பூமியைவிட 317 . 5 மடங்கு அதிக நிறை உள்ளது. பூமியில் மட்டும்தான் எடை என்று குறிப்பிடுகிறோம். எடை என்பது ஈர்ப்பு விசைக்குத் தகுந்தாற்போல மாறும். எனவேதான் பூமியைத்தவிர மற்ற கோள், சூரியனில் எல்லாம் நிறை என்றே சொல்லவேண்டும்.

சனிக்கோளின் ஒரு நாள் என்பது 10 மணி 32 நிமிடம் 36 நொடிகள். சனிக்கு அடுத்து இருக்குற யுரேனஸ் கோளின் ஒரு நாள் என்பது 17  மணி 14  நிமிடம் 23 நொடிகள். நெப்டியூனின் ஒரு நாளுக்கும் கிட்டத்தட்ட அதே நேரம்தான் 16 மணி 6.6 நிமிடம்.

வேறு கோள்களில் உங்களின் வயது?

அது இந்த கோள்களின் ஒரு நாள் நேரத்துடனும், ஒரு வருஷ காலத்துடனும் சம்பந்தப்பட்டது.  உங்களது மகனின் பிறந்த நாள் 11 .02 .1990 என்று வைத்துக்கொள்வோம். பூமியில் தங்களது பையனின் வயது 22 வயது என்றால், புதன் கோள்லே 91 .3 வருஷம் ஆகும். ஆனால் அடுத்த பிறந்த நாள், திங்கள் கிழமை,  செப்டம்பர்  9, 2012 தான் வரும். அதே போல்  வெள்ளியிலே, 35.7 வயசு, அடுத்த பிறந்த நாள் 2012 , ஏப்ரல் 5 , வியாழக்கிழமை வரும். ஆனால் பூமியிலே, அடுத்த பிறந்த நாள் 2013 , பிப்ரவரி 10, ஞாயிறு அன்னிக்கு வரும். இந்த   ஆண்டு லீப் வருஷம்.

செவ்வாயில் வயது 11 .6. அடுத்த பிறந்த நாள் தேதி வியாழன்  செப்டம்பர்,  6, 2012. ஆனால் வியாழனில் தங்களது மகன் குழந்தைதான். வயது 1.85. அடுத்து வரும் பிறந்த தேதி சனிக்கிழமை, நவம்பர் 2, 2013 தான்.

சனிக் கோளில் ஒரு வயது கூட ஆகியிருக்காது. நம் பூமியிலே பிறந்த பிள்ளைக்கு 22 வயது என்றால், அது சனிக்கோள்லே பிறந்திருந்தால், அதற்கு  0.74 வருஷம் தான் ஆகி இருக்கும். அடுத்த , பிறந்த நாள் ஞாயிறு, ஜுலை 28, 2019லே வரும்.

இன்னும் தொலைவிலே இருக்கிற யுரேனஸ் கோளில் பூமியின் 22 வயது இளைஞருக்கு, வெறும் 0.26 வருடம்தான் ஆகும். அடுத்த பிறந்த நாள், 2074 , பிப்ரவரி 15ல், வியாழன்  அன்று நிகழும்.

joghanas_370எட்டாவது கோளில் குழந்தை 22 வருஷத்துக்கு முன்னால் பிறந்து இருந்தால், இப்போது அதற்கு வயது 0.13 வருடம்தான். அடுத்த பிறந்த நாள் 2154ல் தான். அந்த வருடம் நவம்பர் 28ல், வியாழக்கிழமை  வரும். 

ஒவ்வொரு கோளிலேயும் ஓர் ஆண்டு என்பது அதனோட சுற்று வேகத்தையும், அது எத்தனை நாட்களில் சூரியனைச் சுற்றி வருகிறது என்பதையும் பொறுத்தது. இதையெல்லாம் 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைகோ பிராகியும், அவரின் உதவியுடன் ஜொகான்னஸ் கெப்ளரும் (1571 -1630), கணித சூத்திரங்கள் மூலம் சரியாகக் கண்டறிந்தனர்.

Pin It

நம் அண்டை உலகமான சந்திரன் நோக்கிய பயணச் சாதனைகள் தொடங்கி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தேறி வருகின்றன.

அப்போலோ பயண சாதனைகளுக்குப் பிறகு ஏறத்தாழ 20 ஆண்டுகள் கழித்து, 1992 டிசம்பர் 7 அன்று சந்திரனை உற்று நோக்கிய கலிலியோ எனும் அமெரிக்க விண்கலம் சந்திர வட துருவம் அருகே நிலாப்  பள்ளங்களில் நிரந்தரப் பனிக்கட்டி படிந்திருப்பதனை அறிவித்தது. அவ்வளவுதான். 

moon_370தொடர்ந்து 1994 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் அமெரிக் காவின் ‘கிளமென்டைன்’ (Clementine) எனும் ஆய்வுக் கலம் சந்திரனின் தென் துருவத்தில் தண்ணீர்ப் பனிக்கட்டிகள் உறைந்தி ருப்பதாகத் தெரிவித்தது. நிலாவின் வட கோளத்தில் 10,000 முதல் 50,000 சதுர கிலோமீட்டர் பரப்பிலும், தென் பகுதியில் 5000 முதல் 20,000 சதுர கிலோ மீட்டர்கள் அளவிலும் ஏறத்தாழ 30 கோடி டன்கள் தண்ணீர் ஒளிந்தி ருப்பது நிச்சயம்.

இது ஏற்கனவே அறிவித்ததை விட ஏறத் தாழ 20 மடங்கு அதாவது 600 கோடி டன்கள், ஏறத்தாழ 30 கோடி லாரிகள் தண்ணீர் என்றால் சும்மாவா? இதையே வேறு விதமாகச் சொன் னால் சந்திர நிலத்தடி நீரின் அளவு இந்துமாக் கடலின் தண்ணீர் அளவில் ஒரு கோடியில் ஒரு பங்கு விண்வெளி நாடுகள் யாவுமே நிலாத் தண்ணீரைக் குறிவைக் கின்றன. 

நிலாப் பயணங்கள் மேற் கொண்ட நாடுகளின் வரிசையில் ரஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பிறகு இன்று ஐரோப்பாவும், ஜப்பானும், சீனாவும் சேர்ந்து கொண்டன. அதற்கு அடுத்த ஆறாம் இடம்   இந்தியாவிற்கே என்று சொல்லவேண்டியது இல்லை.

எப்படியோ, சந்திராயன் விண்கலம் நிலாவை 100 கிலோ மீட்டர் துருவப்பாதையில் சுற்றியது. 

சந்திரனின் கனிம வளங்கள் பற்றி ஆராய்ந்ததில்  நம் நாட்டின் சந்திரயானில் இடம் பெற்ற  அமெ ரிக்காவின் ‘எம்-3’ (Moon Mineralogy Mapper -MMM) என்று குறிப் பிடத் தக்கது. அமெ ரிக்கா வின் ஜே.பி.எல். என்கிற‘ஜெட் புரொப்பல்ஷன்’ லேபோரட்டரி  (தாரை உந்தும ஆய்வுச்சாலை) ஆராய்ச்சிக் கூடமும், பிரௌன் பல்கலைக் கழகமும் இணைந்து வடிவமைத்த கருவி. இது ஏறத்தாழ 95 விழுக்காடு நிலாவைத் தனக்குள் பொதிந்து கொண்டது. சந்திரனில் செறிந்து உள்ள ஹைடிராக்சில் நீர்க்கூறு அம்சம் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

உலக வரலாற்றில் இது முற்றிலும் புதிய கண்டுபிடிப்பு என்பது இருக்கட்டும்.

2009 ஆகஸ்ட் அன்று வடதுருவப் பனி அளவை ஆராய்வதற்கு சந்திரக் கண்காணிப்புச் சுற்றுகலம் (Lunar Reconnaissance Orbiter) என்கிற விண்கலனை நிலவுக்கு அனுப்பிற்று. அதில் நாசாவின் சிறு வானலை அதிர்வுஏற்பி (Miniature Radio Frequency) ஒன்று இடம் பெற்றது. அதன் பிம்பங்கள் நிலாவை முப் பரிமாணத் தில் பதிவு செய்தது. அங்குத் துரு வப் பகுதிக  ளில் பனி உறைந்து இருந்ததைக் கண்டுபிடித்து அறிவித்து உள்ளது.

அமெரிக்காவின் நிலாக் கண்காணிப்புச் சுற்று கலமும், சந்திரயானின் மினி சார் எனும் சிறிய செயற்கைத்துளை ரேடார் (Mini-Synthetic Aperture Radar) கருவியும் சேர்ந்து ஒரே தருணத்தில் நிலாவின் வட துருவத்தில் மேலாக நின்று ‘எர்லாங்கர்’ குழுவினைப் படம் பிடித்தன. நான்கு நிமிடங்களாக இவை பதிவு செய்த தகவல்கள் பூமியில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் பயன்பாட்டு இயற்பியல் ஆய்வுக்கூடத்தில் பெறப்பட்டு ஆய்வுகள் நடந்தன.

அதே ஆண்டு செப்டம்பர் 7-8 ஆகிய நாள்களில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், அமெரிக்காவின் நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளிக் கழக அறிவியறிஞர் கள் கூடி அலசி ஆராய்ந்தனர். அதன்படி நிலாத்தண்ணீர் உறுதி செய்யப்பட்டுவிட்டது. அது குடிக்கிற மாதிரி திரவ நீர் அல்ல. பனிக்கட்டிகளும் அல்ல. மண் படிகங்களிலும், மணலிலும் பிணைந்து உள்ள நீர்க்கூறுகள் அவ்வளவே.

moon_1_370இதற்கிடையில் நிலாப் பாறைகளில் ஆக்சிகரணப்படுத்தப்பட்ட உலோகத் தாதுக்கள் உள்ளன என்பதால், அவற்றில் இருந்த சுவாசிக்க ஆக்சிஜனைப் பிரித்து எடுக்கும் ஆராய்ச்சியில் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் வெற்றி பெற்று உள்ளனர். இத்தனைக்கும் மத்தியில், சந்திரனின் சுற்று வட்டமும் ஆண்டு தோறும் 4 செமீ வீதம் விரிவடைந்து வருகிறது என்பது அதிர்ச்சித் தகவல்.

அது நம்மில் இருந்து மெல்ல மெல்ல விலகி வருகிறதாம். 2004ஆம் ஆண்டு கிரிகொரி ஏ.கிராசின்ஸ்கி (Gregory A.Krasinsky) மற்றும் விக்டர் ஏ.பரம்பர்க் (Victor A.Brumberg) ஆகியோர் ஆய்வுப்படி புவிக்கும், சூரியனுக்கும் இடையிலான தூரம் கூட ஒவ்வோர் ஆண்டும் 15 செமீ வீதம் அதிகரித்து வருகிறதாம்.

நிலாத் தண்ணீர் மனதுக்குக் குளிர்ச்சி. விலகும் சந்திரன் சந்திரனுக்கே குளிர்ச்சி தரும். இந்த நிலையில் சந்திரன் குறித்து இன்று புரியதோர் தகவல் கண்டு அறியப்பட்டு உள்ளது.

வேறு ஒன்றுமில்லை. சந்திரனின் பருவ ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறதாம். நிலாக் கண்காணிப்புச் சுற்று கலன் பார்வையில் நிலாவின் தரைப்பரப்பில் பல்வேறு ‘முண்டு விரிசல்கள் (Lobate Scarps) பதிவாகி உள்ளன - நிலா முகத்தில் வயதான சுருக்க ரேகைகள் மாதிரி.

கடந்த 100 கோடி ஆண்டுகளுக்குள் 100 மீட்டர்கள் அளவு சுருங்கி விட்டது என்கிறார் அமெரிக்காவில் ஸ்மித்சோனியப் பல்கலைக் கழகத்தின் ஆய்வுக் குழுத் தலைவர் தாமஸ் வாட்டர்ஸ். அதாவது ஒவ்வொரு நூற்றாண்டும் நம் நிலா 10 மைக்ரோன் அளவு மெலிந்து வருகிறது. சராசரி தலைமுடி அளவில் பத்தில் ஒரு பங்கு. இதற்குப் போய்ப் பயப்படுவானேன் என்கிறீர்கள்?

ஆனாலும் நம் நிலா சும்மா அழகுப் பதுமையாய்ச் சுற்றிவராமல் புவி வரலாற்றியல் அடிப்படையில் சதா இயங்கிக்கொண்டு இருக்கிறது என்பதுதான் இன்றைய புதிய தகவல்.  

(அறிவியல் ஒளி டிசம்பர் 2011 இதழில் வெளியானது)

Pin It