வியாழனின் துணைக்கோள்களில் ஒன்றான ஈரோப்பாவில் (Europa) கார்பனின் கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கண்டுபிடிப்பு ஈரோப்பாவில் உள்ள கடல், சூரியக் குடும்பத்தில் நாளை மனிதன் அந்நியக் கோளில் வாழ மிகப் பொருத்தமான இடம் என்று வலியுறுத்துகிறது.

சூரியக்குடும்பத்தில் மிகப்பெரிய கோள் என்று கருதப்படும் வியாழனின் பல நிலவுகளில் ஒன்றான ஈரோப்பாவில் தரைப்பரப்பிற்கு கீழ் பரந்துவிரிந்து அமைந்துள்ள இந்த கடல் கார்பனைக் கொண்டுள்ளது. கார்பன் என்ற தனிமம் உயிர் வாழ மிக அவசியமானவற்றில் ஒன்று. இது ஜேம்ஸ் வெஃப் (James Webb) விண்வெளி தொலைநோக்கியால் கண்டுபிடிக்கப்பட்டது.

குளிர்ச்சியான இருண்ட இந்த கடலில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பதற்கு இக்கண்டுபிடிப்பு பதில் கூறவில்லை என்றாலும், கடலின் 10 மைல் பரப்பில் அமைந்த அடர்ந்த பனி மூடிய தரைப்பரப்பிற்குக் கீழ் அமைந்துள்ள உப்புக்கடலில் இருந்தே இந்த நிலவின் தரைப்பரப்பில் கார்பன்டை ஆக்சைடு பனிக்கட்டிகள் உருவாகியுள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.europa 670உயிரினங்கள் வாழும் வாய்ப்பு

பல காலங்களாக விஞ்ஞானிகள் இந்த நிலவில் உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் பற்றி ஆராய்ந்து வரும் நிலையில் இக்கண்டுபிடிப்பு மிக முக்கியமானது என்று அமெரிக்கா டெக்சாஸ் தென்மேற்கு ஆய்வுக் கழகத்தின் புவி வேதியியலாளர் மற்றும் ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரியர் டாக்டர் கிறிஸ்ட்டஃபர் க்ளைன் (Dr Christopher Glein ) கூறுகிறார்.

இந்த கடலில் உயிரினங்கள் இப்போது வாழ்கின்றனவா என்பது பற்றி இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றாலும் மற்ற கோள்களில் உயிரினங்கள் வாழ்வது பற்றி விஞ்ஞானிகள் விண்வெளி உயிரியல் ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் ஈரோப்பாவில் கடலில் கார்பனின் கண்டுபிடிப்பு ஆய்வாளர்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளித்துள்ளது. இரண்டாயிரம் மைல் அகலம் உள்ள ஈரோப்பா புவியின் துணை நிலவான சந்திரனை விட சற்று சிறியது.

சவால்கள்

கோட்பாடுரீதியாக இங்கு உயிர்கள் வாழ்வதாகக் கருதினாலும் அவை பல தகவமைப்பு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தரை வெப்பநிலை மிக அரிதாகவே -140 டிகிரி செல்சியஸை எட்டும். வியாழனின் இருந்து வரும் கதிர்வீச்சு மற்றொரு பிரச்சனை. ஆனால் ஈரோப்பாவின் கடல் 40-100 மைல் அல்லது 64-160 கிலோமீட்டர் ஆழமானது. இதன் 10-16 மைல் ஆழத்தில் அமைந்திருக்கும் பனிப்பரப்பே உயிர்கள் பற்றிய ஆய்வாளர்களின் தேடலுக்கு முக்கிய காரணம்.

கடலில் கார்பன் எப்படி வந்தது?

ஆழம் நிறைந்த இந்த கடலில் உள்ள கார்பன் உள்ளிட்ட உயிர் வாழ இன்றியமையாத தனிமங்களின் செறிவு போன்ற வேதியல் கூறுகளைப் பொறுத்தே இங்கு உயிரினங்கள் வாழ முடியும். இந்த நிலவின் மேற்பரப்பில் திட நிலையில் கார்பன் இருப்பது முந்தைய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது என்றாலும், இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. கார்பன் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கடலில் இருந்து உமிழப்பட்டதா அல்லது இந்நிலவின் மீது மோதிய எரிகற்களால் ஏற்பட்ட தாக்கத்தினால் உண்டானதா என்று தெளிவாகத் தெரியவில்லை.

ஈரோப்பாவின் தரைப்பரப்பில் கார்பன் டை ஆக்சைடின் விநியோகத்தை ஜேம்ஸ் வெஃப் தொலைநோக்கி அகச்சிவப்பு கருவிகளைப் பயன்படுத்தி ஆராய்ந்தபோது டாரா ரெஜியோ (Tara Regio) என்ற பகுதியில் கார்பன் டை ஆக்சைடு அதிக அளவில் இருப்பது தெரியவந்தது. சுமார் 695 சதுர மைல் அல்லது 1,800 சதுர கிலோமீட்டர் பரப்புடைய இப்பகுதி அதிக விண்வெளிச் செயல்பாடுகள் நடக்கும் பகுதி என்பதைக் குறிக்கும் வகையில் கலவரப்பகுதி “chaos terrain” என்று அழைக்கப்படுகிறது.

பனி படர்ந்த தரைப்பரப்பு

இப்பகுதி பனிப்பாறைப் பிளவுகள் மற்றும் பனிப்பாறை முனைகள் நிறைந்த பகுதி. பனிப்பாளங்களாக உருவான இவை அழுத்தப்பட்டு நிலவியல் செயல்முறைகள் (Geological processes) மூலம் தரையின் மேற்பகுதிக்கு தள்ளப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. “பனிப்பாறைகள் அடர்ந்த ஈரோப்பாவின் உப்புக்கடலில் இருந்தே இந்த கார்பன் டை ஆக்சைடு உருவாகியுள்ளது. எரிகற்கள் மோதலால் அல்லது அயணிகள் வெடித்துச் சிதறியதால் இது உருவாகவில்லை. உயிரினங்கள் கார்பன் டை ஆக்சைடை சார்ந்தே வாழ்கின்றன என்பதால் இந்த கண்டுபிடிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது” என்று நாசாவின் ஜெட் உந்துவிசை ஆய்வுக்கூடத்தின் விண்வெளி உயிரியலாளர் மற்றும் ஆய்வுக்கட்டுரையின் மற்றொரு இணை ஆசிரியர் கெவின் ஹேண்ட் (Kevin Hand) கூறுகிறார். உயிர் வாழ இன்றியமையாத பல வேதி மாற்றங்களில் கார்பன் டை ஆக்சைடு முக்கிய பங்கு வகிக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆறு முக்கிய தனிமங்கள்

ஆறு பெரிய தனிமங்கள் (big six elements) என்று விண்வெளி உயிரியலாளர்களால் அழைக்கப்படும் கார்பன், ஹைடிரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் சல்பர் ஆகியவை பூமியில் உயிர்கள் தோன்றக் காரணமாக இருந்தன. இதில் சல்பர் கடலில் இருந்து வந்ததா அல்லது இயோ (Io) என்ற வியாழனின் மற்றொரு நிலவில் இருந்து வந்ததா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றாலும் கார்பன், ஹைடிரஜன், ஆக்சிஜன் மற்றும் சல்பர் ஆகிய உயிர் வாழ அவசியமான நான்கு முக்கிய தனிமங்களும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஜேம்ஸ் வெஃப் மற்றும் அடுத்த ஆண்டு ஏவத் திட்டமிடப்பட்டுள்ள ஈரோப்பா க்ளிப்பர் ஆய்வுக்கலன் (Europa Clipper mission) நடத்தும் ஆய்வுகளில் இருந்து நைட்ரஜன் போன்ற வேறு உயிர் வாழத் தேவையான மற்ற பொருட்கள் இங்கு உள்ளனவா என்பது பற்றிய கூடுதல் விவரங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சயன்ஸ் (Science) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக்கட்டுரையுடன் இது பற்றி வெளிவந்த இன்னொரு கூடுதல் ஆய்வு ஈரோப்பாவில் காணப்படும் கார்பனில் கார்பன்12 மற்றும் கார்பன்13 என்ற இரண்டு ஐசோடோப்புகள் கூடுதலாக உள்ளன என்று கூறுகிறது. இந்த பொருட்கள் உயிர்கள் வாழ்வதற்கான அடையாளம். ஆனால் இந்தப் பகுப்பாய்வு முழுமை அடையவில்லை.

நாளைய மனிதனின் புது வீடு

இக்கண்டுபிடிப்புகள் முக்கியமானவை. சுவாரசியமானவை. உயிர் வாழ திரவநிலை நீர், சரியான வேதிக்கூறுகள், ஆற்றலைப் பெற உகந்த மூலம், உயிர் பரிணாம வளர்ச்சியடைய போதுமான காலம் போன்றவை அவசியம். வருங்கால ஆய்வுகள் இவை அனைத்தும் ஈரோப்பாவில் இருப்பதை உறுதி செய்யும். அப்போது நாம் அனைவரும் அங்கு வாழ்வோம் என்று லண்டன் பல்கலைக்கழக மலார்டு கோளியல் ஆய்வுக்கூடத்தின் (Mullard Space Science Laboratory) தலைவர் பேராசிரியர் ஆண்ட்ரூ கோட்ஸ் (Prof Andrew Coates) கூறுகிறார்.

வியாழனின் ஈரோப்பா நாளைய மனிதனின் புது வீடாக மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/science/2023/sep/21/scientists-excited-to-find-ocean-of-one-of-jupiters-moons-contains-carbon?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

பூமியைப் போலவே நிலவும் இரும்பிலான இதயத்தையே பெற்றுள்ளது என்று விஞ்ஞானிகள் முதல்முறையாகக் கண்டுபிடித்துள்ளனர். ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் நடந்த ஆய்வுகளுக்குப் பிறகு நிலவின் உட்கருப்பகுதி (inner core) பூமியைப் போல திட வடிவ இரும்பைக் கொண்டுள்ளது என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

புதிதாக வெளியிடப்பட்டுள்ள நிலவின் அமைப்பு கடினமான மேலோடு (crust), மிகக் கடினமான மேண்டில் (Mantle) பகுதி, மேண்டிலும் கருப் பகுதியும் சந்திக்கும் இடைப்பட்ட இடத்தில் குறைந்த பாகுநிலை அடர்த்தியுடைய (viscocity) பகுதி, திரவநிலை வெளிக்கருப் பகுதி மற்றும் திடநிலை உட்கருப் பகுதியைப் பெற்றுள்ளதைக் காட்டுகிறது.

இதன் மூலம் நிலவின் உள்ளமைப்பைப் பற்றிய நீண்ட நாள் புதிருக்கு விஞ்ஞானிகள் விடை கண்டுள்ளனர். நமக்கு அருகாமையில் இருக்கும் வான் பொருளான நிலவு கூழ்ம நிலை வெளிக்கருப் பகுதி மற்றும் திட நிலை உட்கருப் பகுதியைக் கொண்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் உள்ள கோட் டேசர் பல்கலைக்கழகம் மற்றும் வான்பொருட்களின் இயந்திரவியல் ஆய்வுக்கழகத்தின் (Côte d'Azur University and the Institute of Celestial Mechanics and Ephemeris Calculations IMCCE) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இது பற்றிய ஆய்வுக் கட்டுரை சமீபத்தில் நேச்சர் (Nature) ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.moon 641பாறைகளின் உலகமா நிலவு?

நிலவை ஆராய விண்கலங்களை மனிதன் அனுப்புவதற்கு பல காலங்களுக்கு முன்பிருந்தே அதன் அமைப்பு பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் பூமி உருவாகும் முன்பே செவ்வாயின் போபோஸ் (Phobos) மற்றும் (Deimos) நிலவுகள் போல தோன்றிய பாறைகளின் உலகமா நிலவு அல்லது இந்த துணைக்கோள் செழுமையான நிலவுப் புவியியலைப் பெற்ற ஒன்றா என்பது பற்றி காரசாரமான விவாதங்கள் நடந்தன.

நாசாவின் அப்போலோ திட்டங்கள் மூலமே நிலா பூமியைப் போன்ற உள்ளமைப்பைப் பெற்றுள்ளது என்ற கருத்து முதல்முறையாக விண்வெளியியலாளர்களிடையில் ஏற்பட்டது. லூனார் ஆய்வுக்கலன்களின் தரவுகள் நிலவின் மையப்பகுதி அடர்த்தி மிக்க பொருளாலான அடுக்கினால் ஆனது என்றும், மேற்பரப்பிற்கு அருகில் இருக்கும் பகுதி குறைந்த அடர்த்தியுடைய பொருளால் ஆனது என்றும் கண்டறியப்பட்டது.

இதனால் அதுவரை நினைக்கப்பட்டிருந்தது போல நிலவு ஒரே மாதிரியான பாறைப்பொருட்களால் ஆன சமதளப் பரப்பு இல்லை என்று அறியப்பட்டது. அப்போலோ பயணிகள் நிலவின் பரப்பில் விட்டுவிட்டு வந்த நில அதிர்வுகளை ஆராயும் கருவிகள் அதன் மேற்பரப்பில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை கண்டறிந்து கூறின.

கூழ்ம நிலையில் வெளிப்புற கருப்பகுதி

என்றாலும் அப்போலோ பயணங்கள் மற்றும் லூனார் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட எண்ணற்ற தரவுகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள் நிலவின் உட்கட்டமைப்பைப் பற்றிய தெளிவான விவரங்களை பல ஆண்டு ஆய்வுகளுக்குப் பிறகு இப்போதே கண்டுபிடித்துள்ளனர். நாசாவின் தரவுகள் மூலம் நிலவின் வெளிப்புற கருப்பகுதி கூழ்ம இரும்பினால் ஆனது என்றும், இது மேன்டிலுடன் சந்திக்கும் பகுதி உருகிய பரப்பினால் தெளிவாகப் பிரிந்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

விரிவான கணினி மாதிரிகளைப் பயன்படுத்தி நடந்த ஆய்வின் மூலம் நிலாவின் உட்புற கருப்பகுதியில் இரும்பு உள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அப்போலோ திட்டங்கள் மற்றும் நாசாவின் க்ரெயில் (Grail) திட்டத்தின் மூலம் கிடைத்த நிலவின் நிலவியல் அமைப்பு பற்றிய தரவுகள் ஒரு ஆண்டிற்கும் மேலக ஆராயப்பட்டபோது இதன் உட்கருப் பகுதி 500 கிலோமீட்டர் அகலம் மட்டுமே உடையது என்பது தெரிய வந்துள்ளது.

நிலவில் இரும்பு

நிலவின் மொத்த அகலத்தில் இது வெறும் 15% மட்டுமே. இதன் உள்ளமைப்பைப் பற்றி ஆராய்வதில் விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்களுக்கு இதுவே காரணம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். மேண்டில் பரப்பில் இருந்து மெழுகுக் குமிழ்கள் போல வெதுவெதுப்பான உருகிய பொருள் வெளிவருவதும் அறியப்பட்டது. நிலாவின் மேற்பரப்பில் இரும்பு இருப்பதை இது எடுத்துக் காட்டலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

எழில் கொஞ்சும் பூமியின் அருகாமை வான்பொருளான நிலவின் உட்பகுதி எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய அறிவு மனிதனுக்கு இதன் நிலவியல் அமைப்பு பற்றி இருந்து வரும் புதிர்களுக்கு விடை காண உதவும். ஒருகாலத்தில் நிலவு வலிமை வாய்ந்த காந்தப்புலத்தைப் பெற்றிருந்தது. ஆனால் இன்று அங்கு அது இல்லை. பாறை மாதிரிகள் பூமிக்கே சவால் விடும் வகையில் அமைந்த காந்தப்புலம் அங்கு இருந்ததைக் காட்டுகிறது.

பத்தாண்டில் பல உலக நாடுகளின் விண்வெளி நிறுவனங்களும் பல தனியார் அமைப்புகளும் நிலவுக்குப் பயணம் செல்ல திட்டமிட்டுள்ள நிலையில் இந்த வான்பொருளின் ஆழ்பகுதியில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் மனிதகுலத்திற்குக் கிடைக்கத் தொடங்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். நிலவைப் பற்றி மேலும் ஆழமாக ஆராய இந்த கண்டுபிடிப்பு உதவும் என்று கருதப்படுகிறது.

** ** **

மேற்கோள்: https://www.livescience.com/space/the-moon/for-the-1st-time-scientists-confirm-the-moon-has-a-solid-iron-heart-just-like-earth

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

பூமியில் இருந்து 60 மில்லியன் மைல் தொலைவில் உள்ள 4.6 பில்லியன் ஆண்டு பழமையான பெனு (Bennu) என்ற விண்கல்லிற்கு நாசா அனுப்பிய ஓசைரிஸ்-ரெக்ஸ் (Osiris-rex) விண்கலன் சேகரித்த மாதிரிகள், கடந்த செப்டம்பர் 24 2023 அன்று பூமிக்கு வந்தது. அமெரிக்கா யூட்டா (Uta) பாலைவனப்பகுதியில் விஞ்ஞானிகளால் சேகரிக்கப்பட்ட இந்த மாதிரிகள் இப்போது ஆராயப்படுகிறது.

இந்த சேகரத்தில் பழமையான கல் துகள்கள், மண் துகள்கள், மற்றும் கறுப்பு நிற தூசுகள் உள்ளன. இப்பொருட்களில் கார்பன் மற்றும் நீர் அதிக அளவு இருப்பது ஆய்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளது. இப்பொருட்கள் அடங்கிய பெட்டகம் பூமியில் வந்து தரையிறங்கியது முதல் இதை விஞ்ஞானிகல் ஆராயத் தொடங்கினர். இப்பெட்டகம் ஒரு அறிவியல் பொக்கிஷம் என்று ஹூஸ்ட்டன் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தில் நடந்த கூட்டத்தில் இது பற்றிப் பேசிய இத்திட்டத்தின் முதன்மை ஆய்வாளரும், அரிசோனா பல்கலைக்கழகத்தின் டக்ஸன் (Tucson) பிரிவு விஞ்ஞானியுமான டாண்ட்டே லொரேடா (Dante Lauretta) கூறுகிறார்.

வரலாற்றுச் சாதனையாக மிக அதிக அளவில் கொண்டு வரப்பட்ட இந்த கார்பன் செழுமையுடைய மாதிரிகள், பூமியில் உயிரின் தோற்றம் பற்றி வரும் தலைமுறைகள் அறிய உதவும் என்று நாசா நிர்வாகி பில் நெல்சன் (Bill Nelson) கூறுகிறார். பெனுவில் இருந்து மூன்றாண்டு காலம் பயணம் செய்து ஒரு விண்கலன் பூமிக்கு பத்திரமாக வந்து சேர்ந்துள்ளது என்பதே பெரிய வெற்றி.

விண்வெளியில் இருந்து வந்த போனஸ்

தொடக்கத்தில் பெனுவில் இருந்து 2oz அல்லது 60 கிராம் அளவுள்ள பொருளை எடுத்து வர மட்டுமே திட்டமிடப்பட்டிருந்தது. ஒரு oz என்பது 28.349 கிராம் நிறையுள்ள பொருளின் அளவு. இப்பொருட்களை ஆராய மையத்தில் புதிய தூய்மையான அறைகள் கட்டப்பட்டுள்ளன. பெட்டகத்தின் மூடி திறக்கப்பட்டபோது, சேகரிக்கும் கலனின் தலைப்பகுதியின் வெளிப்புறம், அதன் அடிப்பகுதி மற்றும் மூடியில் கூடுதல் விண்கல் பொருட்கள் போனஸாக கிடைத்துள்ளதை ஆய்வாளர்கள் அறிந்தனர்.

bennu sample

(ஓசைரிஸ்-ரெக்ஸ் சேகரித்து அனுப்பிய விண்கல் பொருட்கள்)

எதிர்பார்த்ததை விட மிக அதிக அளவில் கிடைத்ததால் முதன்மை சேகரத்தில் இருந்தவற்றைப் பகுத்து வகைப்படுத்த, பிரித்து வைக்க தாமதம் ஏற்பட்டது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த செயல்முறை மெதுவாகவும், கூடுதல் கண்காணிப்புடனும் நடக்கிறது. இதுவரை மேலோட்டமான பகுப்பாய்வு மட்டுமே நடந்துள்ளது.

பொருட்கள் அனைத்தும் ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் படமெடுத்தல், அகச்சிவப்புக்கதிர் அளவீடுகள், x கதிர் சிதறல் மற்றும் வேதிப்பொருள் பகுப்பாய்வு போன்ற முறைகளைப் பயன்படுத்தி ஆராயப்பட்டது. மாதிரிகளில் ஒன்றின் முப்பரிமாண கணினி மாதிரியைப் பெற x கதிர் கணினி டோமோகிராபி கருவி பயன்படுத்தப்பட்டது. இந்த மாதிரியின் உதவியுடன் அப்பொருளின் பன்முகத் தன்மை வாய்ந்த உட்கட்டமைப்பை அறிய முடியும்.

இதன் மூலம் இப்பொருட்களில் ஏராளமான கார்பனும், நீரும் இருப்பது முதல்நோக்கில் தெரிய வந்துள்ளது. “ஆய்வுகளின் ஆரம்ப கட்டமே இது. உண்மை ஆய்வுகள் இனியே தொடங்கவுள்ளது. நாம் யார், எங்கிருந்து வந்தோம் போன்ற கேள்விகளுக்கு பதில் பெறுவதையே இந்த ஆய்வுகள் நோக்கமாகக் கொண்டுள்ளன. ஓசைரிஸ்-ரெக்ஸ் போன்ற விண்கலன்கள், பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய விண்கற்கள் பற்றிய நம் அறிவை மேம்படுத்த உதவும். அதே நேரம் உயிரின் தோற்றம், வாழ்வின் தொடக்கம் பற்றிய தேடல்களுக்கு பதில் கிடைக்கும்” என்று பில் கூறுகிறார்.

சூரியக் குடும்பம் எவ்வாறு தோன்றியது, உயிர் தோன்ற காரணமான பொருள் எவ்வாறு பூமிக்கு வந்தது, பூமியின் மீது விண்கற்கள் மோதாமல் இருக்க நாம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் போன்றவற்றிற்கு விடை கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

அண்டவெளியில் நமது பாரம்பரியம்

“பெனுவை ஆராய்வதன் மூலம் கிடைக்கும் ஒவ்வொரு சிறு தகவலும் நம் அண்டவெளிப் பாரம்பரியத்தின் (Cosmic heritage) இரகசியங்களை அறிய உதவும் சிறு சிறு முன்னேற்றங்களே” என்று லொரெடா கூறுகிறார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் விஞ்ஞானிகள் இந்த பொருட்களின் பண்புகளை ஆராய்வர். சேகரத்தின் 70% ஜான்ஸன் மையத்தில் அமெரிக்க மற்றும் பல உலக நாடுகளின் விஞ்ஞானிகள் ஆராய்வதற்காக பாதுகாத்து வைக்கப்படும். கூடுதல் மாதிரிகள் ஸ்மித்சோனியன் மையம், ஹூஸ்ட்டன் விண்வெளி மையம் மற்றும் அரிசோனா பல்கலைக்கழகத்திற்கு பொதுமக்கள் பார்வைக்காக கடனாகக் கொடுக்கப்படும்.

தொடரும் விண்கலனின் பயனம்

பெனுவில் இருந்து மாதிரிகளை எடுத்து வந்த ஓசைரிஸ்-ரெக்ஸ் ஆய்வுக்கலன் அமெரிக்கா மேரிலாந்ந்து க்ரீன் பெல்ட்டில் உள்ள நாசாவின் கார்டெடு விண்வெளி ஆய்வு மையத்தால் (Goddard Space Flight Center) நிர்வகிக்கப்பட்டு, 2029ல் பூமிக்கு அருகில் வரும் அப்பாபிஸ் (Apophis) என்ற விண்கல்லை நோக்கி தன் அடுத்த பயணத்தைத் தொடங்கியுள்ளது. 2068ல் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று முன்பு கருதப்பட்ட இது, 2021ல் ஐரோப்பிய விண்வெளி முகமையால் ஆபத்தான விண்கற்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

உயிரின் தோற்றம், சூரியக்குடும்பம் மற்றும் அதில் பூமி தோன்றிய கதையை பெனுவின் மாதிரிகள் விரைவில் எடுத்துச் சொல்லும் என்ற நம்பிக்கையுடன் உலகம் காத்திருக்கிறது.

மேற்கோள்கள்: https://www.theguardian.com/science/2023/oct/11/nasa-asteroid-samples-osiris-rex?

&

https://www.mathrubhumi.com/science/news/nasa-s-bennu-asteroid-sample-contains-carbon-water-1.8980369

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

அன்றும் இன்றும் என்றும் மனிதனுக்கு அற்புத வான் காட்சிப் பொருளாக இருந்து வரும் நிலவு முன்பு எப்போதையும் விட இப்போது விஞ்ஞானிகளிடையில் அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. நீடித்த நிலையான வளர்ச்சியுடன் நிலவைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தீவிர ஆய்வுகள் இன்று நடைபெறுகின்றன. நிலவின் மேற்பரப்பு மண்ணில் இருக்கும் கண்ணாடி மணிகள் பில்லியன் கணக்கான டன்கள் நீரைக் கொண்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

நிலவில் இருந்து எடுத்து வரப்பட்ட மாதிரிகளை ஆராய்வது வருங்காலத்தில் அங்கு தளங்களை அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று நம்பப்படுகிறது. நிலவின் மேற்பரப்பில் இருப்பதாகக் கருதப்படும் பில்லியன் கணக்கான நீரை எதிர்காலத்தில் அங்கு செல்லும் விண்வெளி வீரர்கள் பிரித்தெடுத்துப் பயன்படுத்தலாம்.

விண்வெளி நிறுவனங்கள் தங்கள் கவனத்தை நிலவின்பால் செலுத்தி வரும் வேளையில் அவர்கள் அங்கு முகாம்களை அமைக்க இந்த கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இதன் மூலம் நாளை நிலவுக்குச் செல்லும் மனிதர்களுக்கு நீர்வளத்திற்கான முக்கிய மூலமாக மட்டும் இல்லாமல் இது ஹைடிரஜன், ஆக்சிஜனின் மூலமாகவும் இருக்கும் என்று கருதப்படுகிறது.moon 700மீண்டும் நிலவுப் பயணம்

“தங்கள் ஆய்வில் இது பரவசமூட்டும் ஒரு கண்டுபிடிப்பு” என்று ஓப்பன் (Open) பல்கலைக்கழக கோளியல் மற்றும் ஆராய்ச்சிப் பிரிவின் பேராசிரியர் மகேஷ் ஆனந்த் (Prof Mahesh Anand) கூறியுள்ளார். இதனால் நிலவின் சூழலிற்கு பாதிப்பு ஏற்படாமல் நீடித்த நிலையான வளர்ச்சியுடன் அதை ஆராய முடியும். மனிதன் நிலவில் கால் பதித்து, நடந்து அரை நூற்றாண்டிற்கும் மேல் ஆகியுள்ள நிலையில் நாசா மற்றும் பிற விண்வெளி நிறுவனங்கள் மீண்டும் மனிதனை நிலவுக்கு அனுப்பத் தயாராகி வருகின்றன.

நாசா விரைவில் தனது ஆர்டிமிஸ் திட்டத்தின் மூலம் முதல் பெண் வீராங்கனை மற்றும் வெள்ளையர் அல்லாத ஒருவரை நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் நாசா வெளியிட்ட ஆர்டிமிஸ் பயணிகள் பட்டியலில் ஒரு பெண் வீராங்கனையும் இடம் பெற்றுள்ளார். விண்வெளியில் அதிக நாட்கள் (320 நாட்கள்) தங்கி ஆய்வுகளை மேற்கொண்டவர் என்ற சாதனையைப் படைத்த 44 வயதான மின் பொறியியலாளர் கிறிஸ்டினா காஃப்க் (Christina Koch) நிலவிற்குச் செல்லும் முதல் பெண் என்ற பெருமையைப் பெறுகிறார்.

ஐரோப்பிய விண்வெளி முகமை நிலவில் கிராமம் ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளது. பூமிக்கு அப்பால் நிலவில் அமையவிருக்கும் இந்த ஆய்வு நிலையங்களுக்குத் தேவையான மூலப்பொருட்களை நிலவில் இருந்தே பெற இந்தக் கண்டுபிடிப்பு பெரிதும் உதவும்.

டிசம்பர் 2020ல் நிலவுக்குச் சென்று திரும்பிய சாங்’இ-5 (Chang’e-5) விண்கலன் பூமிக்கு எடுத்து வந்த நிலவு மண் மாதிரிகளில் கலந்திருந்த நுண் கண்ணாடி மணிகளை (glass beads) விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். இந்த கண்ணாடித் துகள்கள் ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான குறுக்களவையே கொண்டிருந்தன. விண்கற்கள் நிலவின் மீது மோதியபோது மழை போல பெய்த உருகிய திவலைகளால் இந்த மணிகள் உருவாகியுள்ளன. இவை பிறகு திட நிலையை அடைந்து நிலவின் தூசுக்களுடன் கலந்தன.

கண்ணாடித் துகள்கள் ஆராயப்பட்டதில் நிலவின் பரப்பு முழுவதிலும் 300 மில்லியன் முதல் 270 பில்லியன் டன்கள் வரை நீர் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புதிய நிலவுத் திட்டங்களைத் தொடங்குவதில் இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனிதன் இந்த நீர்வளத்தை எவ்வாறு பயன்படுத்துகிறான் என்பதைப் பொறுத்தே வருங்கால நிலவுத் திட்டங்கள் அமையப் போகின்றன. நிலவு எதற்கும் உதவாத ஒரு பாழ்நிலப்பரப்பு இல்லை என்பதை முந்தைய கண்டுபிடிப்புகள் எடுத்துக்காட்டியிருந்தன.

சந்திராயன்1 கண்டுபிடித்தது

1990களில் நாசாவின் க்ளமெண்ட்டைன் (Clementine) ஆய்வுக்கலன் நிலவின் துருவப்பகுதிகளுக்கு அருகில் இருக்கும் செங்குத்தான பெரும் பள்ளங்களின் ஆழமான பகுதியில் நீர் உறைந்த நிலையில் இருப்பதைக் கண்டுபிடித்துக் கூறியிருந்தது. 2009ல் இந்தியாவின் சந்திராயன்1 விண்கலன் சந்திரனின் தூசுப்பரப்பில் நீர் மெல்லிய படலமாக இருப்பதைக் கூறியது. இயற்கை புவி அறிவியல் (Nature Geoscience) ஆய்விதழில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக்கட்டுரையில் நுண் கண்ணாடித் துகள்களில் நீர் பொதிந்துள்ளதைப் பற்றி விரிவாகக் கூறுகிறது.

சந்திரனில் நிரந்தர நிழல் பிரதேசமாக இருக்கும் பள்ளங்களில் பதுங்கியிருக்கும் உறைந்த நிலை நீரைக் காட்டிலும் கண்ணாடித் துகள்களில் இருந்து நீரை மனிதன் அல்லது இயந்திர மனிதனால் சுலபமாகப் பிரித்தெடுக்க முடியும். இத்துகள்களை குலுக்குவதால் அவற்றில் இருந்து நீர் சொட்டு சொட்டாக வெளிவராது. ஆனால் இப்பொருட்களின் வெப்பநிலையை 100 டிகிரிக்கும் அதிகமாக உயர்த்தும்போது இவற்றில் இருந்து நீர் வரத் தொடங்கும். இதை நம்மால் அறுவடை செய்ய முடியும் என்கிறார் ஆனந்த்.

பூட்டி வைக்கப்பட்டிருக்கும் நீர்த்துளிகள்

உயர் ஆற்றல் துகள்களைக் கொண்ட சூரியப் புயற்காற்று (Solar wind) உருகிய நிலையில் இருந்த நீர்த்திவலைகள் மீது மோதியது. சூரியக்காற்று ஹைடிரஜன் உட்கருக்களைக் கொண்டது. திவலைகளில் இருந்த ஆக்சிஜனுடன் இது இணைந்து நீர் அல்லது ஹைடிராக்சில் அயனிகளை உருவாக்கியது. இவ்வாறு உருவான நீர் பின் கண்ணாடித் துகள்களில் அடைபட்டது. இத்துகள்களை சூடுபடுத்தினால் அடைக்கப்பட்டுள்ள நீரை வெளியேற்றலாம்.

இந்த பொருட்கள் மேலும் ஆராயப்பட்டபோது சில குறிப்பிட்ட ஆண்டுகளில் நீர் வெளியேறுவது கண்டுபிடிக்கப்பட்டது. நிலவில் செழுமையான நீர்ச் சுழற்சி இருப்பதை இது எடுத்துக் காட்டுகிறது. சூரிய குடும்பத்தில் இருக்கும் மற்ற கோள்களில் உள்ள காற்று இல்லாத பாறைகள் நீரை உறிஞ்சி வைக்கும் மற்றும் வெளியேற்றும் ஆற்றல் பெற்றவை என்று சீன அறிவியல் அகாடமியின் பீஜிங் பிரிவு விஞ்ஞானி மற்றும் ஆய்வுக்கட்டுரையின் மூத்த இணை ஆசிரியர் பேராசிரியர் சென் ஹூ (Prof Sen Hu) கூறுகிறார்.

நீர்வளத்தின் செழுமை

முன்பு நினைத்திருந்ததை விட நிலவு நீர்ச்செழுமை மிக்கது என்பதை இந்த ஆய்வு எடுத்துக் காட்டுகிறது என்று பெர்க்பெக் (Birkbeck) லண்டன் பல்கலைக்கழக கோள் மற்றும் வானியல் துறை பேராசிரியர் இயான் க்ராஃபர் (Ian Crawfor) கூறுகிறார். அதிக நீர்வளம் இருப்பதாக முன்பு கருதப்பட்ட தொலைதூர துருவப்பகுதிகளை விட தரைப்பரப்பில் இருக்கும் நிலவின் நீர்வளம் வருங்கால மனிதகுல ஆய்வுகளுக்குப் பெரிதும் உதவும். என்றாலும் இந்த வளத்தை நாம் உயர்த்தி மதிப்பிடக்கூடாது. நிலவின் ஒரு கன சதுர மீட்டர் மண் பரப்பில் 130 மில்லி லிட்டர் நீரே உள்ளது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

நிலவின் செழுமையான நீர்வளம் பற்றிய இக்கண்டுபிடிப்பு மனிதன் நாளை நிலவுக்குச் சென்று காலனிகளை அமைத்து குடியேறி அங்கிருந்து சூரியக் குடும்பத்தின் மற்ற கோள்களுக்குப் பயணம் செல்ல முடியும் என்ற புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கோள்: https://www.theguardian.com/science/2023/mar/27/glass-beads-on-moon-surface-hold-billions-of-tonnes-of-water-scientists-say?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It