"புரட்சி" நின்று போவதற்கு சற்று முன், நமது தலைவர் ஈ.வெ.ரா. அவர்கள், ஜஸ்டிஸ் கட்சியோடு சரச சல்லாபம் காட்டுவதாக பாவித்து, அது, சமதர்மிகளுக்குப் பொருந்தாது என்று, ஒரு சிறு கட்டுரை எழுதி இருந்தேன். அதைப் பிரசுரிப்பதற்கு முன் "புரட்சி" நின்று விட்டது. அதனை பிறகு வந்த "பகுத்தறிவில்" அதை அச்சிட்டார்களோ, அது எனக்குத் தெரியவில்லை. அந்தக் கட்டுரையில், நமது நாட்டிலுள்ள பலவித அரசியல் கட்சிகள் சம்பந்தமாக, நாமாகிய சமதர்மிகள் நடந்து கொள்ளும் முறையைப் பற்றியும் எழுதியதாகவும் ஞாபகமிருக்கிறது. இது நிற்க, சுயமரியாதை சமதர்மியர், தற்காலம் நடந்து வரும் தேர்தல்களில் நடந்து கொள்ள வேண்டிய முறையையும், ஜோலார்ப்பேட்டை "சமதர்மம்" என்ற பத்திரிகையிலும் குறிப்பாக எடுத்துக் காட்டியுள்ளேன். இதனை அச்சஞ்சிகையில் பிரசுரித்தார்களோ அதுவும் தெரியவில்லை.

எந்தக் கட்சியினர்களாயினும் அவர்களுக்கு ஓர் திட்டம் இருக்க வேண்டும். அந்தத் திட்டத்திற்குள் தான் அவரவர்கள் நடந்து தீர வேண்டும். வேண்டுமானால் ஒரு திட்டத்திலிருந்து மற்றொரு திட்டத்திற்கு மாறலாம். அதுதான் பகுத்தறிவின் முதல் லட்சணம். தங்கள் பகுத்தறிவுக்கு குறிப்பிட்ட திட்டந்தான் பொருத்தமுளதென்று தோன்றுங்காலை அந்தத் திட்டத்திற்குள்ளிருந்தே நடந்து கொள்வதே ஞாயம்.

periyar 350சமதர்மிகளாகிய நமக்கு ஈரோட்டில் ஒரு திட்டம் 1932ல் வகுக்கப்பட்டுளது. அதனை அமுலுக்குக் கொண்டு வர வேண்டியது நமது கடமை. சுயமரியாதை இயக்கத்தில் தனியாக அரசியல் கட்சி ஒன்றை ஏற்படுத்தியது அந்த ஈரோட்டுத் திட்ட மூலமாகவே. ஈரோட்டில் நமது தென்னாடு சுயமரியாதையோரில் பிரபல அங்கத்தினர்கள், சுமார் 300 பேர்களுக்கு மேலாக ஏகமனதாக ஒத்துக் கொண்ட சமதர்ம திட்டமதுவே. அந்தத் திட்டத்திற்கு முன்னால் எந்த ஏனைய கட்சிகளும் நில்லா என்பது உலகம் தெரிந்த விஷயம். அதாவது உலகிலுள்ள எந்தக்கட்சியாயினும்; சுத்த அரசியல் கட்சியாயினும், குடி அரசு கட்சியாயினும்; முதலாளி கட்சியாயினும், தொழிலாழி கட்சியாயினும்; எந்தக் கட்சிக்கும், உலகை அல்லது நாட்டைச் சீர்திருத்த ஒரே மார்க்கந்தான் உளது. அதுதான் சமதர்ம மார்க்கம் (Socialism)

இதனைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், தற்கால உலக நிலையைச் சற்று நோக்கிப் பாருங்கள். சமதர்ம நாடு ஒன்றைத் தவிர, மற்ற நாடுகள் எல்லாவற்றிலும், வேலை இல்லாமை கோடான கோடி மக்களை வதைத்து வருவதே போதுமானது. எந்த அரசும் அதனதன் மக்களுக்கு உணவு, ஆடை, குடி இருப்பு வசதி சரிசமத்துவமாக உதவவேண்டுமாயின், சமதர்ம மூலமாகத்தான் முடியும். இதற்குத் திருஷ்டாந்தம் வேண்டுமாயின் உலக முழுமையும் சமதர்மக் கொள்கைகளைக் கையாள முயற்சி செய்வதே அறிகுறியாகும். ஆனால் அந்தந்த அரசுகள் சமதர்மக் கொள்கைகளைக் கையாண்டு பார்க்க எத்தனித்தும், ஏன் தோல்வியுறுகின்றார்களென்றால் அவர்கள் பெரும்பான்மையும் கொண்டுள்ள திட்டத்திற்கும், சமதர்மத் திட்டத்திற்கும் பொருத்தமில்லாமையே முதற்காரணமாகும்.

நமது நாட்டில் உள்ள கட்சிகள் யாவும் (ஒன்றைத்தவிர) முதலாளி திட்டத்தில் மூழ்கி கிடக்கின்றவைகளே. முதலாளித் திட்டத்தை வைத்துக் கொண்டு, எந்த நல்லெண்ணத்தோடு சமதர்மக் கொள்கைகளை அனுஷ்டிக்க முயன்றாலும் அது கைகூடி வரமுடியாது. காங்கிரஸ் சமதர்மக் கட்சியாயினும், ஜஸ்டிஸ் சமதர்மக் கட்சியாயினும், அல்லது மாளவியா, கெல்கார், மூஞ்சே, முஸ்லிம் சமதர்மக் கட்சியாயினும், அல்லது இந்து மத சனாதன சமதர்மக் கட்சியாயினும், எந்தக் கட்சியாயினும், ராமராஜ்ய முதல் நிகழ்ந்து வரும் முதலாளித் திட்டத்தை ஆதரித்துக் கொண்டு, "சமதர்மம்" பேசுவார்களாயின், அது பல்லாண்டு கோடி பாமர மக்களை ஏமாற்றுவதாகுமென அறிக. அவ்விதம் பேசும் கட்சியினரை நம்புவதும், நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதெனவும் அறிக. எதுவும் செய்யமுடியாத கட்சியினரை, அதைச் செய்யுங்கள், இதைச் செய்யுங்கள் என்று அவர்களுக்கு உபதேசிப்பதும், வீணான வீண் வேலையென உணர்க.

நமது தலைவர் பார்ப்பனரல்லாதார் மகாநாட்டுக்கு (பார்ப்பனரல்லாதார் என்ற சொல்லை கொட்டை எழுத்தில் போடாததற்கு மன்னிக்க வேண்டும்) விடுத்துள்ள பத்துக் கட்டளை வேலைத் திட்டத்தைப் பரிசோதிப்போம். இந்த வேலைத்திட்டங்களை, ஜஸ்டிஸ் கட்சியிலுள்ள தியாகிகள் (என்ன தியாகம் பிராமணரல்லா தாருக்குச் செய்தனரோ(?) அது நமக்கு விளங்காததைக் குறித்து விசனிக்கின்றோம்!) ஆதரவு அளிப்பதாகவே எண்ணிக் கொள்வோம். கனம். பொப்லிராஜாவும், சர்.ஆர்.கே.ஷண்முகமும், நமது தலைவர் விடுத்துள்ள வேலைத்திட்டத்தை மனமாற இராஜாங்க சபையில் ஆதரிப்பதாகவும் வைத்துக் கொள்ளுவோம். இந்த வேலைத் திட்டங்களை, ஒன்றையாகிலும் சட்டசபையில் கொண்டு வர முடியுமா என்று பார்ப்போம்.

1. அரசியல் உத்தியோக சம்பளங்களைக் குறைக்க வேண்டுமாம்! இதைப் போன்ற (Platitudes) சாமான்ய திட்டங்களை, நமது சத்தியமூர்த்தியும் அடிக்கடி மேடையினின்று வழங்குவது முண்டு! பெருத்த உத்தியோகஸ்தர்களின் சம்பளங்கள், முதலாளி அரசியல் திட்டத்தில் வகுக்கப்பட்டுள்ளது. அதனை எள்ளளவேனும் குறைக்க நமது இந்திய சட்டசபைகளுக்கு அதிகாரம் கிடையா. அவை, ஆங்கில பார்லிமெண்டரி சட்டங்களால் சிருஷ்டிக்கப் பட்டவை நமது இந்திய கவர்ன்மெண்டாராலேயே குறைக்க முடியாதென்றால்! சத்தியமூர்த்திகளும், ஷண்முகங்களும், பொப்லிகளும் என்ன செய்ய முடியும்? அரசியல் திட்ட மொன்றாக இருக்க அதனை மாற்றாமல், அந்த திட்டத்திற்கு உட்பட்டிருக்கும் விபரங்களை எப்படி மாற்ற முடியும். ஆதலின் இவ்வித சீர்திருத்தங்களைச் செய்யவேண்டு மென்பதும் வியர்த்தம். செய்யலாமென்று எண்ணுவதும் மோசடி. செய்கின்றேனென்று சொல்வதும் Cant அதாவது பாசாங்கே!

2. பழைய சமதர்மக் கொள்கைகளில் ஒன்று, கவர்ன்மெண்டே தொழிற்சாலை நடத்த வேண்டுமென்பது இந்த திட்டத்தை கையாள வேண்டுமென்று எந்த முதலாளிக்கட்சிக்காரன் முன் வருவான்? இதனைச் சொன்ன மாத்திரத்தில் ஒரு வோட் கிடைக்குமா? கடந்த 20 வருஷமாக எந்த ஜஸ்டிஸ் பெரியோராவது, இதனை சொல்மாத்திர அளவுக்காயிலும் திட்டம் வகுத்தனரா? நமது ஜஸ்டிஸ் கட்சியினரை இந்த திட்டத்தை ஆதரிக்கக் கேட்டுக் கொள்வது செவிடன் காதில் சங்கூதியதேயாகும்!!

3. உண்பண்டம், தின்பண்டங்களைக் கூட்டுறவு மூலமாகவே வினியோகிக்க அரசாங்கத்தாராலேயே முடியுமா என்று கேட்கின்றோம். அவர்கள் திட்டம், தனி உடைமைத் திட்டம். தனி உடைமை இருந்தால் தான் முதலாளி அரசு நடைபெரும். எந்த அரசாவது தன் தலையில், தானே மண்ணைப் போட்டுக் கொள்ளுமா? Co-operative (Common wealth) ஐ நிலச்சுவான்களுமா? தொழிற்சாலை சொந்தக்காரர்களுமா? மாபெரும் வர்த்தகர்களுமா? அவர்களால் சிருஷ்டிக்கப்பட்ட அஸ்ஸம்பிலி மெம்பர்களுமா? அங்கீகரிக்கப் போகின்றனர்? தங்கள் கனவிலும் சிந்திக்க மாட்டார்களே!

4. விவசாயிகளின் கடன் நிவர்த்தி, யார் செய்யத் துணிவார்கள்? இந்த கடன் சுமார் 1000 கோடி என்று ஒரு கணக்குண்டு. சிலர் 500 கோடி என்பார்கள். இந்த மாபெரும் கடனால் பிழைக்கும் முதலாளிகளால், நமது ஏ. ராமசாமிகளும், சத்தியமூர்த்திகளும் சண்முகங்களும் தேர்ந் தெடுக்கப்படப் போகின்றனர். அவர்களுக்குள்ள முதலாளி செல்வாக்கை, வெறுஞ்சொல்லால் தொலைக்கப் பார்ப்பார்களா? இது வீண் பேச்சு.

5. சர்வ கல்வி, சர்வ குடியாமைகளுக்கு, திட்டங்கள் வகுக்கக் கூடும். சத்தியமூர்த்தியும் சர்வ கல்விக்கு 10 வருஷ திட்டம் வேண்டுமென்கின்றார்! ஆனால், சர்வ கல்விக்கு வேண்டிய பண உதவி, சர்வ குடியாமையால் நேரிடும் நஷ்டம், எந்த முதலாளி அரசாங்கம் தாங்க முடியும்? பெரிய மந்திரிகள் தங்கள் சம்பளத்தை அறைப் பங்கு குறைத்துக் கொள்வார்களா? அவர்கள் மேல் வகுக்கப்பட்டிருக்கும் வருமான வரியை இரட்டித்துக் கொள்வார்களா? இவர்கள் நிழலில் நிற்கின்றவர்களா, சர்வ கல்வியை சட்டசபைகளில் ஆதரிக்கப் போகின்றனர். எத்தனை ஆயிரம் பிராமணரல்லாத மாணவருக்கு சம்பள மில்லாமையும், குஞிடணிடூச்ணூண்டடிணீண் களும், எந்த ராஜ விஸ்வாசி செய்து வைத்தார் என்று கேட்கின்றோம்?

லார்டு ஓபார்ட் கவர்ன்மெண்டிலாகிலும் அகில மகமதிய மாணவர்களுக்கு அரைச் சம்பளம் விதிக்கப்பட்டது! ஆனால் உண்மையை உரைக்க வேண்டுமானால், பிராமணரல்லாத கட்சியால், சிற்சில முதலாளி பிள்ளைகளுக்கே சிற்சில உத்தியோகங்களும், செல்வாக்கும் கிடைத்தனவே ஒழிய, மற்றபடி "பள்ளு பறை பதினெட்டென்று" கூறும் கோடான கோடி பிராமணரல்லாத பாமர மக்களுக்கு ஒரு திரணமேனும் உதவி உண்டாகவில்லை. பாபம், ஜஸ்டிஸ் கட்சி தான் என்ன செய்யும்! இவர்களும் முதலாளிகள் இவர்களை ஆதரிக்கின்றவர் களும் முதலாளிகள்! இவ்விருவருடைய செல்வாக்கையா போக்கிக் கொள்வார்கள்?

6. அவரவர் மதங்களை, ஆதரிக்கப்படுமென்று மத பாதுகாப்புகள் உண்டாயிருக்க, மதங்களை அரசியல் ஆதரவிலிருந்து, யாரால் எடுக்க முடியும். புதிய திட்டத்தை மாற்றினாலன்றோ மதங்களின் செல்வாக்கு விலக்கப்படும்? கோயில்கள் பாதுகாப்பென்று, மத ஸ்தாபன திட்டத்தை உண்டாக்கிய கட்சியா, அல்லது கூட்டமா, மதங்களை அரசாங்க ஆதரவிலிருந்து நீக்குவார்கள்?

முதலாளி திட்டம் எதுவாயினும் அதனை ஆதரிக்கும் கட்சிகளால் பாமர ஜனங்களுக்கு உண்ணவும், உடுக்கவும், இருக்கவும் சலூகைகள் கிடைக்கப் போவதில்லை. அதே திட்டத்தில் இன்று செய்து வரும் அமெரிக்கா, என்.ஆர்.எ.பிரசண்ட சீர்திருத்தத்தால் பத்துக்கோடி மக்களுடைய வேலை இல்லாமையை போக்க முடியாமற் போயிற்றென்றால், நிலச் சுவான்களும், பெரும் வர்த்தகர்களும், தொழிற்சாலை சொந்தக்காரர்களும், மகாத்மாக்களும், மௌலானாக்களும், அதே திட்டத்திலிருந்து கொண்டு அதன் ஊழல்களை எப்படி எடுத்தெரிய முடியும். தற்கால சட்டசபைகளில் முழுப்பங்கு முதலாளி அங்கத்தினர்களாயிருக்க, அவர்கள் முன் காங்கிரசாயினும் ஜஸ்டிஸ் கட்சியாயினும் மற்று வேறு எந்த கட்சியாயினும் என்ன செய்ய முடியும்? இந்த விஷயங்களை விளையாடும் பிள்ளைகளும் அறிந்தது தான்!

நாம் செய்ய வேண்டிய வேலை என்னவென்று கேட்கலாம்? பல கட்டுரைகளில் நமது கடமையைப் பற்றியும், நாம் செய்து வர வேண்டிய வேலையைப் பற்றியும் எழுதியுள்ளோம். ஈரோட்டில் 2 வருஷங்களுக்கு முன் வகுக்கப்பட்ட திட்டங்களும் இருக்கின்றன. அந்த திட்டங்களை அமுலுக்குக் கொண்டு வராமல் அந்த திட்டங்களை கனவிலும் நினையாத கட்சிக்காரரோடு சரச சல்லாப வார்த்தைகளைப் பேசுவதால் யாது பயனென்று கேட்கின்றோம்? நாம் நல்ல பிள்ளையென்று பெயரெடுக்க வேண்டுமானால் அது வெகு சுளுவில் அடையலாம்!

மகாத்மாக்களையும், மௌலானாக்களையும் நல்ல பிள்ளைகளென்று யார் தான் சொல்ல மாட்டார்கள்!

எல்லா இயக்கங்களும் ஆரம்பிக்கும் போது உயர்வான நோக்கங்களைத் தான் வெளியிடுகிறார்கள். அனுஷ்டானத்தில் யாதொன்றும் பயன்படுவதாகக் காணோம்! ஒவ்வொரு கட்சிகளிலும் சுயநலம் அதிகரித்து அந்தந்தக் கட்சிகளின் கோரிக்கைகளை (Ideals) நிறைவேறச் செய்ய முடியாமற் போகின்றது. பிராமணரல்லாதாரை காக்க வேண்டி வந்த இரண்டொரு காட்சிகள் அரசியல் துறையில் நுழைந்தவுடன்! தங்கள் இனத்தாரில் இரண்டொருவருக்குப் பட்டம் பதவியுடன் நின்று விட்டன. இத்யாதி முடிவு உலக முழுமையும் நிறைந்துள. சுருங்கக் கூறுமிடத்து, முதலாளிக் கூட்டத்தில் அடங்கிய கட்சிகள் யாவும் ஒன்றுக்கொன்று தாறுமாறாக நடக்கும். அதனதன் இயற்கை லக்ஷணங் களைப் பாமர ஜனங்கள் அறியும்படி உழைப்பதும், உழைத்து வருவதும் தான் உண்மையான சமதர்மிகளின் கடமை என்று எண்ணுகிறோம்.

- தோழர் ம. சிங்காரவேலு பி.ஏ., பி.எல்.,

***

குறிப்பு: சரியாகவோ தப்பாகவோ ஜஸ்டிஸ் கட்சி சம்மந்தம் 6, 7 வருஷ காலமாக இருந்து வருகிறது. அதோடு ஜஸ்டிஸ் கட்சி காங்கிரசை விட மோசமானது என்று எனக்கு எந்தத் துறையிலும் தோன்றவில்லை. காங்கிரஸ் ஜாதி ஆதிக்கம் வேண்டுமென்கிறது. ஜஸ்டிஸ் பண ஆதிக்கம் வேண்டுமென்கிறது. காங்கிரஸ் தலைவர்களுக்கு எப்படித் தங்கள் பூணூலைக் கழட்டி எறிய முடியவில்லையோ அப்படித்தான் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களுக்குப் பணத்தை வீசி எறியவோ பணம் சம்பாதிப்பதை தியாகம் செய்யவோ முடியவில்லை. நான் என்னைப் பொருத்த வரை பணக்கொடுமையை விட, பூணூல் கொடுமையே பலமானதும், மோசமானதுமென எண்ணுகிறேன்.

மற்ற பல விஷயங்களில் தோழர் சிங்காரவேலு அவர்கள் அபிப்பிராயந்தான் அநேகமாக நானும் கொள்ளுகிறேன். தீர்மானங்களின் மூலம் ஜஸ்டிஸ் கட்சியாரின் மனப்பான்மை வெளியாகட்டும் என்பதும் ஒரு ஆசையாகும்.

பொப்பிலி ராஜா பெரிய பணக்காரர். தோழர் ஷண்முகம் பெரிய பதவிக்காரர். இருவரும் இன்னமும் பணமும், பதவியும் பெற ஆசைப்படலாம் என்றே முடிவு செய்து கொள்ளுவோம். ஏனெனில் அவர்கள் இருவரும் துறவிகள் அல்ல. பணமும், பதவியும் ஆசைப்படுவது இன்றைய உலக வாழ்க்கை முறையில் பாதகமான காரியமும் அல்ல. ஆனால் இவர்கள் காங்கிரஸ் தலைவர்கள் சத்தியவாதிகள், சத்தியாக்கிரகிகள், அஹிம்சைவாதிகள் என்பவர்களைவிட மோசக்காரர்களா? சூட்சிக்காரர்களா? ஏமாற்றுக்காரர்களா? என்பதை யோசித்துப் பார்க்கும்படி பிரார்த்திக்கிறோம்.

எனது பிரேரேபணைகள் ஜஸ்டிஸ் கட்சி வேலைத் திட்டத்திற்கே ஒழிய சுயமரியாதைக் கட்சி வேலைத் திட்டத்திற்கல்ல. இக்கொள்கைகளை ஜஸ்டிஸ் கட்சி ஒப்புக் கொள்ளா விட்டால் நமக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை.

இதை அவர்கள் ஒப்புக் கொண்டால் மேலால் நடக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி நாம் எல்லோரும் யோசிப்போம். இதனால் சுயமரியாதை இயக்கத்திற்கு வகுத்த திட்டங்கள் பாதிக்கப்பட்டு விடாது.

சுயமரியாதை இயக்கத் திட்டத்தில் கண்டபடியே தான் இத்திட்டத்திலும் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு என்று எழுதி இருப்பதுடன் நமக்கு அதிகாரம் இல்லாத விஷயங்களில் கிளர்ச்சி செய்து அதிகாரம் பெறுவது என்றும் குறிப்பிட்டிருக்கிறதே ஒழிய வேறில்லை. எந்த இயக்கத்தின் மூலம் எந்தத் திட்டம் வகுக்கப்பட்டாலும் இன்று இந்த முறையில் தான் வகுக்கக் கூடும்.

- ஈ.வெ.ரா.

(பகுத்தறிவு ஆசிரியர் குறிப்பு 30.09.1934)

Pin It