அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் பாஜகவுக்கு எதிரானவர் அல்ல.
திராவிட இயக்கத்திலோ, கம்யூனிஸ்ட் கட்சியிலோ, காங்கிரசிலோ கூட அவர் இல்லை. வியாபாரத்தை நேர்த்தியாகச் செய்யக் கூடியவர்.
வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.
பாஜக பரிவாரங்களுக்கு நண்பராக இருப்பவர். அதனால்தான் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்திய கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார். அவர் GST வேண்டாம் என்று சொல்லவில்லை. GST வரிவிதிப்பு குழப்பம் இல்லாமல் இருந்தால் போதும் என்று மட்டும் தான் கோரிக்கை வைத்தார்.அதுவும் மேடையில் இருந்த சட்டமன்ற உறுப்பினரைச் சாட்சியமாக்கி, நடைமுறை அனுபவத்துடன் விளக்கினார். அதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல், அதிகாரத் திமிரை ஆணவத்துடன் வெளிப்படுத்தி இருக்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர்.
இந்த நேரத்தில், வரலாற்று நிகழ்வு ஒன்றை நினைவு படுத்த வேண்டிய தேவை உள்ளது.
'பிராமணாள் கபே', 'பிராமணாள் ஹோட்டல்' பெயர்ப் பலகைகளை நீக்கச் சொல்லி பெரியார் முன்னெடுத்த போராட்டத்தின் முக்கியக் களமாக இருந்தது திருவல்லிக்கேணி பாரதி சாலை (பைகிராப்ட்ஸ் ரோடு) முரளி கபே.
முரளி பிராமணாள் கபே என்றிருந்ததை 1956 மே மாதம் முதல் 1957 மார்ச் வரை தொடர்ச்சியானப் போராட்டம் நடத்தியும், திராவிடர் கழகத் தொண்டர்கள் தினமும் பத்துப் பத்துப் பேராகக் கைதாகி சிறை சென்றும், ஹோட்டல் மாடியிலிருந்து கொட்டப்பட்ட வெந்நீரால் போராட்டக்காரர்கள் துன்பப்பட்டும், நீண்ட போராட்டத்துக்குப் பின் ‘பிராமணாள்’ நீக்கப்பட்டு, முரளி ‘ஐடியல்’ கபே ஆனது. சிந்தாதிரிப்பேட்டையில் பெரியாரை இரவு நேரத்தில் சந்தித்த ஹோட்டல் முதலாளி தன் ஹோட்டல் நிர்வாகத்தின் செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோரினார்.
அப்போதெல்லாம் இப்படி முதுகுக்குப் பின்னே செல்போன் கேமராவால் வீடியோ எடுக்கும் வசதிகள் கிடையாது. அதிகபட்சம் புகைப்படம் எடுக்கலாம். ஆனாலும் பெரியார் இதற்கு அனுமதிக்கவில்லை.
முரளி கஃபே முதலாளி தன்னை வந்து சந்தித்து மன்னிப்புக் கேட்டதைக்கூட "விடுதலை" நாளிதழில் செய்தியாக வெளியிடக் கூடாது என்றும் கறாராக உத்தரவிட்டார்.
அவர் தான் பெரியார்!
அதனால் தான் பெரியார்!!
- இர்சாத் அகமது & செல்வம் முடியரசன்