1.
அடர்ந்திருக்கும்
அந்த மெளனத்திலிருந்து
ஒரு துளி ஓசை தான்
என் உள்ளத்தில்
ஓங்கி அறைகிறது
ஆழ்ந்திருக்கும்
ஒரு மனதின் கனம் தான்
ஆனால் எவ்வளவு பெரிய
வீரியம் அதற்குள்
கட்டுக்கடங்கா இந்த
பெரும் வெடிப்புக்குள்
மையம் கொண்டுள்ளது
காத்திருந்து கரையைக்
கடக்கத் துடித்திடும்
புயலொன்று
2. கவிதை
குப்பைக் காகிதங்களாய்
குவிந்து கிடக்கும் நினைவுகள்
எடுத்து ஒட்டி வைத்துக் கொண்ட
என் மன வெளியினை
எட்ட வைத்துப் பார்த்திட
அழகாக விரிகின்றது
காகிதங்களைச் சுமந்து
நிற்கும் கவிதையொன்று
- நிவேதிகா பொன்னுச்சாமி