
கையோடு
உப்பெடுத்து வருகிறீர்கள்
அட்டைப்பூச்சியை
உருக்குலையச் செய்ய
எலிகளுக்கு
விஷம் வைத்துவிட்டு
நாய்கள் குறித்து
மனுப்போடுகிறீர்கள்
மாநகராட்சிக்கு
தும்பியை நூலால் கட்டி
துடிக்கச் செய்துவிட்டு
வண்ணத்துப்பூச்சி தேடுகிறீர்கள்
வண்ணமிழக்க வைக்க
முருங்கையின் கம்பளிக்கும்
வேம்பின் தேனடைக்கும்
தீப்பந்தம் கொளுத்துகிறீர்கள்
வெறியோடு
குறி பார்த்து எறியப்படும்
உங்களின் கற்களுக்கு
உதிர்வது
பழங்களோடு சில
பறவைகளும்தான்
உங்களைத் தவிர
இவ்வுலகில் வாழ
யாவும்
அருகதையற்றவையாகி வருகின்றன
ஒரு நாள்
நீங்களுமாவீர்கள்.
- மாறன்